பாடம் 17: படித்துப் பார்ப்போம்

சியாம் : தாத்தா! தாத்தா! மண்வெட்டியுடன் எங்கே போகின்றீர்கள்?

தாத்தா : எங்களுடைய தோட்டத்திற்குப் போகிறேன்.

சியாம் : நானும் வரலாமா?

தாத்தா : சரி வா.

சியாம் : தாத்தா, நாங்கள் எதற்காகத் தோட்டத்திற்குச் செல்கிறோம்?

தாத்தா : தோட்டத்தில் மரங்களை நடுவதற்குப் போகிறோம்.

சியாம் : தாத்தா, எமது தோட்டத்தில் நிறையக் காய்கறிச் செடிகள் நட்டிருக்கிறோமே. இன்று புதிதாக எதை நடப் போகிறோம்?

தாத்தா : சியாம், இன்று நாம் "வாழைமரம்" நடப் போகின்றோம்.

சியாம் : வாழை மரமா? நீங்கள் வைத்திருப்பது மிகவும் சிறிதாக இருக்கிறதே?


தாத்தா : ஆமாம், வாழையின் இளையது வாழைக்குட்டி! இந்த வாழைக் குட்டியை நட்டு தினமும் நீர ஊற்றினால் அது வளர்ந்து பெரிய மரமாகும்.

சியாம் : அது சரி தாத்தா, வாழை மரத்தினால் எமக்கு என்ன பிரயோசனம்?

தாத்தா : ஆமாம். பயன் நிறைய இருக்கின்றது. வாழைக் குட்டியைத் தோட்டத்தில் நட்டபின் அதைப்பற்றிக் கூறுகின்றேன்.

தாத்தா : மரம் மரம் வாழை மரம் வாழை மரம் வாழை மரம் தண்டு தண்டு வாழைத் தண்டு இலை இலை வாழையிலை பூ பூ வாழைப் பூ காய் காய் வாழைக் காய் வாழைக் காய் வாழைக் காய் பழம் பழம் வாழைப் பழம் வாழைப் பழம் வாழைப் பழம்

சியாம் : வாழை மரத்தில் இத்தனை சிறப்புகளா!

தாத்தா : ஆமாம், இதைவிட இன்னமும் பல சிறப்புக்கள் உண்டு.

சியாம் : சொல்லுங்கள் தாத்தா, கேட்க ஆசையாக இருக்கிறது.

தாத்தா: இதோ சொல்கிறேன். கவனமாகக் கேள்.


  1. வாழை மரத்துக்கு கிளைகள் இல்லை. வாழை இலை நீளமாகவும் அகலமாயும் இருக்கும்.
  2. திருவிழாக் காலங்களிலும், திருமண வைபவங்களின் போதும், வீட்டு வாசலிலே குலையுடன் வாழையைக் கட்டுவார்கள்.
  3. விரத நாட்களிலும், விருந்துபசாரத்தின் போதும் வாழையிலையில்தான் உணவு உண்பார்கள்.
  4. வாழைநார் மாலை கட்டப் பயன்படுகிறது.
  5. வாழைத்தண்டு, வாழைப்பொத்தி, வாழைக்காய் இவை அனைத்துமே எமக்கு உணவாகப் பயன்படுகிறது.
  6. வாழையில் கப்பல், கதலி எனப் பல இனங்கள் உண்டு.
  7. வாழைப்பழம் சுவையானது. மலிவானது. எல்லாக் காலங்களிலும் பெற்றுக் கொள்ளக் கூடியது.
  8. வாழைக் குலையை வெட்டியதும் வாழையையும் வெட்டி நிலத்துள் உரமாகப் புதைப்பர்.
  9. வாழை மரத்தின் அடியிலுள்ள கிழங்கிலிருந்து பல வாழைக் குருத்துக்கள் தோன்றிப் புதிய வாழைக் குட்டிகள் வளரும்.

சொற்களை உரத்து வாசிப்போம்.

நாங்கள் நீங்கள் உங்கள்
மஞ்சு பிஞ்சு இஞ்சி
வெண்மை உண்டு நண்டு
விருந்து தந்தை குழந்தை
ஐம்பது உறக்கம் கம்பி
பன்னீர் முன்னங்கால் நன்றி

________________________________________________________________________________________________________________________________________________________________________________________