தந்திரம் என்றதும் ஞாபகத்துக்கு வருவது நரிதான். ஒரு நாள் அப்படிப்பட்ட ஒரு நரி தான் செய்த தந்திரங்களை எண்ணிப் பெரும் சந்தோஷப்பட்டது. தனியே சிரித்தது. தனியே கதைத்தது. தனியே ஆடியது. எங்கே செல்கின்றோம் என்று கூடத் தெரியாமல் கால்போன போக்கில் வெகுதூரம் சென்றது. என்னைத் தந்திரத்தால் வெல்பவர் எவருமில்லை என்று இறுமாப்புக் கொண்டது.
அப்பொழுது அவ்வழியால் காட்டுப்பூனை ஒன்று வந்தது. தற்பெருமை கொண்ட நரி காட்டுப் பூனையை வலுச்சண்டைக்கு இழுத்தது.
"ஏய், கரும் பூனையே! எங்கே செல்கின்றாய்? நான் யார் தெரியுமா? காட்டுக்கே அரசனான சிங்கத்தையும் தன்னைவிடப் பெரிய அறிவாளி இல்லை என நினைத்துக் கொண்டிருந்த காகத்தையும் என் தந்திரத்தால் தோற்கடித்திருக்கிறேன்" என்று தன் பெருமையை அளக்கத் தொடங்கியது.
"ஐயோ! என்னை விட்டு விடுங்கள். மரம் ஏறுவதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது"என்று காட்டுப் பூனை பயத்துடன் அடக்கமாகக் கூறியது. "அப்படியென்றால் நீ ஒரு புத்தியில்லாத முட்டாள்" என்று பூனையை நரி ஏளனம் செய்தது.
அவ் வேளையில் திடீரென ஏதோ சத்தம் கேட்டது. காட்டுப் பூனை மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டது. நரி திரும்பிப் பார்த்தது. அருகில் வேடர்களைக் கண்டது. வேடர்களை எவ்வாறு ஏமாற்றலாம் எனத் திட்டம் இடுவதற்குள் வேடர்கள் நரியைக் கொன்று விட்டனர். யாருடன் பழகவேண்டும் என்பதை ஒளவை கூறும் ஒரு அறிவுப் பாடல் பாடுவோம்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.