பாடம் 11: எமது உடைகள்

இடம் : பூங்கா

பாத்திரங்கள்: மாமா, சுதா, வினுஜா, நரேன், விநோத், வருண்.

வருண் : மாமா, நீங்கள் அணிந்திருக்கும் உடைகள் அழகாக இருக்கின்றன

மாமா : நீங்கள் எல்லோரும்தான் அழகான உடைகள் அணிந்திருக்கிறீர்கள். எல்லாமே புத்தாடைகள் போலத் தெரிகின்றன.

சுதா : ஆமாம். மாமா எல்லோரும் புத்தாண்டுக்கு வாங்கிய உடைகளையே அணிந்திருக்கிறோம்.

மாமா : அப்படியா! சுதாவுடைய இந்த அழகான சட்டையை வாங்கித் தந்தவர் யார்?

நரேன் : நான் அணிந்திருக்கும் அரைக்காற் சட்டை, “ரீசேர்ட்”, தொப்பி எல்லாமே புதியவை.

வருண் : ஆமாம் மாமா. எனது காலுறைகூட புதியது. விநோத் : எனது அம்மா எனக்குப் புத்தாடைகளோடு குளிருக்கு அணியும் சில கம்பளி உடைகளும் வாங்கித் தந்தார்.

வினுஜா : நான் ஒரு தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். மாமா, அதில் பலர் உடுத்திருந்த உடைகள் எனக்கு விநோதமாக இருந்தன.

மாமா : அப்படியா வினுஜா! உனது நண்பர்கள் எல்லோரும் தமிழர்கள்தான். அவர்கள் எல்லாவிதமான உடைகளையும் அணிகின்றார்கள். ஆனால் தமிழர்களுக்கென்று சில விசேடமான உடைகளும் இருக்கின்றன.

வினுஜா : அப்படியா மாமா!

மாமா : ஆமாம், ஆண்கள் வேட்டியும் மேற்சட்டையும் அணிவார்கள். சிலர் சால்வையும் போடுவார்கள். பெண்கள் சேலை, சோளி அணிவர். சிறுமிகள் பாவாடையும் சட்டையும் அணிவார்கள்.

சுதா : பாவாடை என்பது நீளமானது தானே. மாமா என்னிடம் பட்டுப் பாவாடையும் சட்டையும் இருக்கின்றன. நான் கோவிலுக்குப் போகிறபோது அவற்றை உடுத்துவேன்.

நரேன் : நான் அணிந்திருக்கும் சட்டை மாத்திரம் தான் புதியது மாமா. நான் புதிய காற்சட்டை அணியவில்லை. ஏனென்றால் அது கட்டையாக இருந்தது.

மாமா : ஆனாலும் உனது “சேர்ட்” அழகாக இருக்கிறது. இதன் வர்ணம் கவர்ச்சியானது.

வருண் : நாங்கள் கதைத்தது போதுமென்று நினைக்கிறேன். மாமா, வாருங்கள் எல்லோரும் பூங்காவைச் சுற்றிப் பார்க்கலாம்.

மாமா : வருண் சொல்வது சரி. வாருங்கள் சுற்றிப் பார்ப்போம்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடி மகிழுங்கள்

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றி


காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்

கட்டிக் கொஞ்சும் அம்மா

பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்

பருகத் தந்த அம்மா


புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்

பூவுஞ் சூட்டும் அம்மா

அழுது விழுந்த போதும் என்னை

அணைத்துத் தாங்கும் அம்மா


அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி

அழிவு செய்த போதும்

பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று

பொறுத்துக் கொள்ளும் அம்மா


பள்ளிக் கூடம் விட்ட நேரம்

பாதி வழிக்கு வந்து

துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி

தோளில் போடும் அம்மா


பாப்பா மலர்ப் பாட்டை நானும்

ஆடும் போது

வாப்பா இங்கே வாடா என்று

வாரித் தூக்கும் அம்மா


க.வேந்தனார்,

யாழ்ப்பாணம்.