பாடம் 12: பருவ காலங்கள்

நாம் பூமியில் வாழ்கிறோம். பூமி தன்னைத் தானே சுற்றுகிறது. இதனால் இரவும் பகலும் ஏற்படுகின்றன. பூமி சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனைச் சுற்றிவர ஓர் ஆண்டு செல்லும். பூமி சூரியனை வட்டப் பாதையில் 23°சாய்ந்த நிலையில் சுற்றி வரும். சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி வருவதால் பூமியில் பல காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்தக் காலநிலை மாற்றம் ஓர் ஒழுங்கில் நடைபெறும். காலநிலைக்கு ஏற்றவாறு வகுக்கப்படுவதே பருவ காலங்கள் ஆகும். பருவ காலங்கள் நாட்டிற்கு நாடு வேறுபடும்.

பொதுவாகப் பருவ காலங்கள் நான்கு ஆகும். அவை வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம், குளிர்காலம் என்பவையாகும்.

ஐரோப்பிய நாடுகளில் பங்குனி மாதம் முதல் வைகாசி மாதம் வரை வசந்த காலம் காணப்படும். இதனை இளவேனில் என்றும் கூறுவர். வசந்த காலம் மகிழ்ச்சி நிரம்பிய காலம். எங்கும் மரங்கள் பூத்துக் குலுங்கும். பூக்களின் மணம் எங்கும் பரவியிருக்கும். குளிர் காலத்தில் கூடுகளில் பதுங்கியிருந்த பறவைகள் சுதந்திரமாகப் பறந்து திரியும்.

ஆனி மாதம் தொடக்கம் ஆவணி மாதம் வரை கோடைக் காலமாகும். இலண்டனில் ஓரளவு வெப்பநிலை உள்ள காலம் இதுவாகும். சராசரியாக வெப்பநிலை 26° C அளவில் காணப்படும். பருவ காலங்கள் பருவ காலங்கள் பருவ காலங்கள்

கோடைக் காலத்தை முதுவேனிற் பருவம் எனவும் கூறுவர். கோடை காலத்தில் நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும். விடுமுறை நாட்களில் கடற்கரைகளில் மக்கள் கூடிக் களிப்பார்கள். பல களியாட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெறும். கோடை விடுமுறையை கழிப்பதற்காகப் பலர் குடும்பமாகப் பிற நாடுகளுக்குப் பயணம் செய்வார்கள்.

இலண்டனில் புரட்டாதி மாதம் தொடக்கம் கார்த்திகை மாதம் வரை இலையுதிர் காலம். இலையுதிர் காலத்தில் மரங்களின் பச்சை இலைகள் யாவும் மஞ்சள், சிவப்பு நிறங்களாக மாறும். பின்னர் மலர்களும் இலைகளும் உதிர்ந்து விடும். பல மரங்கள் இலைகளே இல்லாமல் ஆகிவிடும்.

மார்கழி மாதம் தொடக்கம் மாசி மாதம் வரை குளிர்காலம் ஆகும். இக்காலத்தில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும். குளிரும் ஈரலிப்பும் காணப்படும். சில காலங்களில் உறைபனி ஏற்படுவதும் உண்டு. இலண்டனில் வாழ்வோர் இப்பருவ காலத்தின் மாலைநேரங்களை உல்லாசமாகக் களிப்பர். மாலைநேர உற்சவங்கள், விருந்துகள், இசை நிகழ்ச்சிகள் என்பவை கோலாகலமாக நடக்கும். நத்தாரும் புத்தாண்டும் இப்பருவ காலத்திலேயே வருவதால் இது விழாப் பருவ காலமாகக் கொள்ளப்படுகின்றது. பருவ காலங்கள் இயற்கையின் மற்றுமொரு விந்தையே.

மேற்கூறிய காலநிலை மாற்றம் பெரும்பாலும் பூமியின் வடகோளத்திலுள்ள சீதள வலய நாடுகளுக்குப் பொருந்தும். தென்கோளத்திலுள்ள அவுஸ்திரேலியா, தென் அமெரிக்காப் பகுதிகளில் காலங்கள் எதிர்மாறாக வரும். வட கோளத்து கோடை எனின் தென்கோளத்தில் குளிர்காலம் ஆகவிருக்கும்.

பாடி மகிழுங்கள்

ஆடிப்பிறப்பு

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!

கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!


பாசிப் பயறு வறுத்துக் குற்றிச் செந்நெல்

பச்சையரிசி இடித்துத் தள்ளி

வாசப் பருப்பை அவித்துக்கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து


வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டி

சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு


வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக்கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே.


பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டு மாவுண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவாள்

மணக்க மணக்க வாயூறிடுமே.


குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொளுத்தி வைத்து

மங்கள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே.


வன்னப் பாலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே.


வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே.


- நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.

தோண்டி - ஒருவகைப் பாத்திரம்

வில்லை - வட்ட வடிவம்

வெல்லம் - சர்க்கரை