ஓர் அழகிய இனிய மாலை நேரம். பகல் முழுவதும் உலா வந்த ஆதவன் மேற்கிலே மெதுவாக மறைவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அருகிருந்த மலைகளின் ஊடாக மெல்லிய குளிர்காற்று வீசிக்கொண்டு இருந்தது. அரண்மனை நந்தவனத்தில் அரசியாருடனும், இளவரசனுடனும் உலா வந்துகொண்டிருந்த அரசர் முகத்திலும் அந்தக் குளிர்காற்று இதமாகப்பட்டது.
அப்போது ஒரு காவலன் அருகே வந்து அரசரை வணங்கினான். அவன் பணிவாக “அரசே! நானும் அரண்மனையில் வேலை செய்கிறேன். உங்கள் அமைச்சரும் வேலை செய்கிறார். ஆனால் நீங்கள் அவருக்கு என்னைவிட அதிகமாக சம்பளம் கொடுக்கிறீர்களே இது நியாயமா?” என்று கேட்டான்.
அரசர் அச்சமயம் பதில் எதுவும் பேசவில்லை. “சரி, நீ நாளைக் காலை என்னை அரண்மனையில் வந்து பார்” என்று கூறினார். அந்தக் காவலன் மீண்டும் அரசரை வணங்கிவிட்டுச் சென்றான். மறுநாள் காலையில் அரண்மனை வாயிலில் அந்தக் காவலன் நிற்பதை அரசர் கண்டார். அவனை உள்ளே வரும்படி கட்டளையிட்டார். அவன் அருகே வந்ததும் “இன்று எமது துறைமுகத்தில் ஏதாவது கப்பல் வந்திருக்கிறதா என்று பார்த்து வா” என்றார். மறுகணமே ஓட்டமும் நடையுமாக துறைமுகத்திற்குச் சென்றான். தூரத்தே ஒரு கப்பல் நங்கூரம் இட்டு நிற்பதைக் கண்டதும் ஆனந்தம் அடைந்தான். வேகமாகத் திரும்பி அரண்மனையை வந்தடைந்த காவலன் அரசரிடம் சென்று “அரசே! துறைமுகத்தில் ஒரு கப்பல் வந்திருக்கின்றது” என்றான்.
“அந்தக் கப்பல் எங்கிருந்து வந்திருக்கின்றது” என்ற அரசர் கேட்டார். உடனே காவலன் மீண்டும் கடற்கரைக்கு ஓடினான். அங்கிருந்தவர்களிடம் அரசர் கேட்ட கேள்வியைக் கேட்டான். பதில் கிடைத்ததும் மீண்டும் அரண்மனையை நோக்கி விரைந்தான்.
“அரசே! அந்தக் கப்பல் அரேபிய நாட்டிலிருந்து வந்திருக்கிறது” என்றான். “மிகவும் நல்லது. அதிலே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன?” என்று அரசர் கேட்டார். திரும்பவும் அந்தக் காவலன் மூச்சு வாங்க அந்தத் துறைமுகத்திற்கு ஓடினான். அந்தக் கப்பலில் உணவுப் பொருட்கள் வந்திருக்கின்றன என்று அறிந்ததும் அரண்மனைக்கு வந்து அப்படியே அரசரிடம் கூறினான்.
அரசர் அவன் மிகவும் களைத்துப்போய் இருப்பதைக்கண்டு அங்கேயே நின்று இளைப்பாறும்படி கூறினார். பின்னர் தமது அமைச்சரை அருகே அழைத்தார். அமைச்சரை விழித்து “அமைச்சரே! இன்று எமது துறைமுகத்தில் ஏதாவது கப்பல் வந்திருக்கிறதா என்று பார்த்து வாரும்” என்றார். அமைச்சரும் அரசன் இட்ட கட்டளைப்படி துறைமுகம் சென்று வந்தார். திரும்பி வந்த மந்திரியார் “அரசே! இன்று எமது துறைமுகத்தில் ஒரு கப்பல் வந்திருக்கிறது. அந்தக் கப்பல் அரேபிய நாட்டிலிருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வந்திருக்கின்றது. அக்கப்பல் இரண்டு நாட்கள் தங்கி அரிசி இறக்குமதி செய்த பின்னர், வெல்லம் ஏற்றுமதி செய்து கொண்டு, சீன நாட்டுக்குப் போக இருக்கிறது என்றார்".
உடனே அரசர் அந்தக் காவலனைப் பார்த்து, “நான் அமைச்சருக்கு ஏன் உன்னைவிட அதிகமாகச் சம்பளம் கொடுக்கிறேன் என்பது இப்போது விளங்குகிறதா?” என்று கேட்டார். அந்தக் காவலன் எதுவுமே பேசவில்லை. அரசர் ஒவ்வொருவருடைய திறமைக்கு ஏற்றவாறே பதவிகளும், ஊதியமும் வழங்குகிறார். தான் அரசரிடம் அப்படிக் கேட்டது எவ்வளவு முட்டாள்தனம் என்று எண்ணி “அரசே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றான்” அரசர் புன்னகை பூத்தார்.
“இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்”
- திருக்குறள்