ஒளவையார் தமிழ் நாட்டிலே வாழ்ந்த பெண்புலவர். அவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நூல்களை ஆக்கினார். அவற்றுள் ஆத்திசூடியில் இருந்து இப்போது ஒரு பகுதியைக் கற்போம். அகர முதல் வரிசையில் எழுதப்பட்டதைக் காண்க.
அ : | அறஞ் செய விரும்பு |
ஆ : | ஆறுவது சினம் |
இ : | இயல்வது கரவேல் |
ஈ : | ஈவது விலக்கேல் |
உ : | உடையது விளம்பேல் |
ஊ : | ஊக்கமது கைவிடேல் |
எ : | எண் எழுத்து இகழேல் |
ஏ : | ஏற்பது இகழ்ச்சி |
ஐ : | ஐயம் இட்டு உண் |
ஒ : | ஒப்புரவு ஒழுகு |
ஓ : | ஓதுவது ஒழியேல் |
>ஒள : | ஒளவியம் பேசேல் |
ஃ : | அஃகஞ் சுருக்கேல். |
அறம் - தருமம், செய - செய்வதற்கு,
விரும்பு - ஆசைப்படு
நற்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்படவேண்டும்.
ஆறுவது - தணிக்கவேண்டுவது, சினம் - கோபமாகும்
கோபத்தை தணியச் செய்யவேண்டும்.
இயல்வது - இயன்றதை, கரவேல் - (இரப்பவருக்கொடாது) ஒளிக்காதே.
இயன்றதை ஒளிக்காமல் செய்ய வேண்டும்.
ஈவது - ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பதை,
விலக்கேல் - தடுக்காதே.
ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பதை கொடாதே என்று தடுக்காதே.
உடையது - உன்னிடம் உள்ளவற்றை
விளம்பேல் - சொல்லாதே.
உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் பறைசாற்றாதே.
ஊக்கமது - முயற்சியை, கைவிடேல் - கை விடக்கூடாது.
செயலில் ஈடுபடும்போது தடங்கல் ஏற்படுமானால் அதைக்கண்டு
தைரியத்தைக் கைவிடக்கூடாது. தொடர்ந்து முயலுவோம்.
எண் - கணக்குக்கு ஆதாரமான எண்ணையும், எழுத்து
இலக்கியத்திற்கு ஆதாரமான எழுத்தையும், இகழேல் - குறைவாக
எண்ணக்கூடாது. கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக் கூடாது.
ஏற்பது - பிறரிடம் சென்று இரப்பது, இகழ்ச்சி - இழிவாகும்.
பிறரிடம் சென்று இரப்பது இழிவாகும்.
ஐயம் - இரப்பவர்களுக்கு ; இட்டு - கொடுத்து, உண் - நீ உண்ணு இரப்பவர்களுக்கு;
உணவு கொடுத்த பின்னர் சாப்பிடவேண்டும்.
ஒப்புரவு - உலக நடையை அறிந்து; ஒழுகு - நட.
உலக நடப்பை அறிந்துகொண்டு அதனோடு பொருந்தி நடந்துகொள்ள வேண்டும்.
ஓதுவது - படிப்பதை; ஒழியேல் - விட்டு விடாதே.
படிப்பதை விட்டு விடக்கூடாது.
ஒளவியம் - பொறாமை, பேசேல் - பேசக்கூடாது.
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
அஃகம் - தானியங்களை; சுருக்கேல் - குறைத்து நிறுக்காதே.
தானியங்களின் எடை அளவைக் குறைத்து நிறுக்கக் கூடாது.