அன்று வினோத்தினுடைய பிறந்த நாள். உறவினர்களும் நண்பர்களும் அவனது வீட்டில் கூடியிருந்தனர். வாழ்த்தினர், பரிசுகள் கொடுத்தனர்.
வினோத் தனக்குக் கிடைத்த பிறந்த நாள் வாழ்த்து மடல்களை ஒரு மேசையின் மீது அழகாக அடுக்கி வைத்தான். ஆனால் ஒன்றை மட்டும் கையில் வைத்துக் கொண்டு தனது இராஜன் மாமா வரும்வரை நண்பர்களுடன் காத்திருந்தான். இராஜன் மாமாதான் அந்த வாழ்த்து மடலை அனுப்பியிருந்தார். அதில் அச்சிடப்பட்டிருந்த பறவையின் படத்தை வினோத்தும் அவனுடைய நண்பர்களும் இதுவரை பார்த்ததேயில்லை. அதனை இராஜன் மாமாவிடமே காட்டி அப் பறவையைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினான்.
அழைப்பு மணி ஓசை கேட்டது. வினோத் நினைத்தது போல் இராஜன் மாமாதான் வந்தார். வினோத்தைக் கட்டியணைத்து முத்தமிட்டார். வாழ்த்துத் தெரிவித்துப் பரிசும் கொடுத்தார். வினோத் நன்றி தெரிவித்தான். வினோத்தும் நண்பர்களும் சேர்ந்து மாமாவிடம் அப்படத்தைக் காட்டினர்.
வினோத் : மாமா இந்தப் பறவையைப் பற்றிக் கூறுங்களேன். மாமா : அந்தப் பறவையின் பெயர் ~ஆர்க்டிக் ரேர்ன்|. அப்பறவை இனம் குளிர்காலத்தில் தனது சொந்தப் பிரதேசமான வடதுருவத்தை விட்டு சுமார் முப்பதாயிரம் கிலோமீற்றர் பறந்து தென்துருவத்துக்கு செல்கின்றது. அங்கு சிறிது காலம் வாழ்ந்த பின்னர் தனது சொந்த இடத்துக்குத் திரும்புகின்றன.
வினுஜா : ஆர்க்டிக் ரேர்ன் மட்டுந்தானா.... தனது சொந்த இடத்தை விட்டு வேறு பிரதேசத்துக்குச் செல்கின்றது?
மாமா : இல்லை. இன்னும் நிறைய பறவை இனங்கள் குளிர்காலத்தில் வெப்பப் பிரதேசங்களை நோக்கிச் செல்கின்றன. அல்பற்றொஸ், வில்சென் பெற்ரல், கனடா கூஉஸ் போன்ற பறவைகள் அவற்றுள் சிலவாகும். நரேன் : ஆம். நானும் வாசித்திருக்கின்றேன். ஒரு வகை தூக்கணாங்குருவிகள் குளிர் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து ஆபிரிக்கா செல்கின்றனவாம்.
சுதா : ஏன் மாமா பறவைகளால் அதிக குளிரில் வாழ முடியாதா?
மாமா : பறவைகளின் சராசரி உடல் வெப்பநிலை 410 செல்சியஸ் என்பதால் அவை மனிதரிலும் பார்க்கக் குளிரைத் தாங்கக் கூடியவை.
வினோத் : அப்படியென்றால் ஏன் அவை வேறு பிரதேசங்களுக்கு செல்கின்றன?
மாமா : இடம்பெயரும் பறவைகளில் அனேகமானவை பூச்சி, புழுக்களையே உணவாக உட்கொள்பவை. குளிர் காலத்தில் பூச்சி, புழுக்கள் அழிந்துவிடுகின்றன. ஆகவே பறவைகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. மேலும் வெப்பப் பிரதேசத்திலேயே கூடுகட்டி முட்டையிட்டு அடை காத்து பொரிக்கின்றன. அதற்காகத்தான் அவை வேறு வெப்பப் பிரதேசங்களை நோக்கிச் செல்கின்றன.
வினுஜா : மாமா பறவைகளால் எவ்வாறு சரியாக வழி கண்டுபிடிக்க முடிகிறது?
மாமா : காற்றின் திசை, நட்சத்திரங்கள், சூரியன் போன்றவற்றின் உதவியுடன் சரியான இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. கோடை முடிய குஞ்சுகளுடன் திரும்ப பழைய இடத்துக்கு செல்கின்றன.
வினோத் : மாமா இடம்பெயரும் பறவைகள் பற்றி வேறு எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?
மாமா : ஏன் புத்தகங்கள், கலைக் களஞ்சியம், இறுவட்டுக்கள் இருக்கின்றனவே. அத்தோடு இணையத்தின் மூலமாகவும் தேடலாமே.
வினோத், நரேன், வினுஜா, சுதா அனைவரும் மாமாவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு புலம் பெயரும் பறவைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் பொருட்டு கணினி அறையை நோக்கி விரைந்தனர்.