பாடம் 12:போரை நிறுத்திய ஒளவையார்

ஒளவையார் தமிழ்மொழி மீது அளவற்ற பற்றுடையவர். பல பாடல்களையும், நீதி நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். அவர் தமிழ் மன்னர்களுடன் வைத்திருந்த அன்பையும், நட்பையும் பற்றிப் பல கதைகள் உள்ளன.

ஒரு சமயம் அதியமான், தொண்டைமான் என்ற இரு மன்னர்களுக்கிடையே போர் மூளப்போவதாக ஒளவையார் அறிந்தார். போரின் விளைவாகப் பலர் உயிரிழப்பர்; பலர் காயமடைவர்; எண்ணற்றோர் பல துன்பங்களுக்கு ஆளாவர். ஆதலினால் அந்தப் போரைத் தடுத்து நிறுத்த அவர் விரும்பினார்.

ஒளவையார் முதலில் அதியமானிடம் சென்று போர் பற்றிப் பேசினார். தொண்டைமான்தான் போர் புரியத் துடிப்பதாக அதியமான் கூறினார். அதன் பின்னர் ஒளவையார் தொண்டைமானிடம் சென்று பேசினார். தொண்டைமான் ஓர் இளைஞன்; பெரிய வீரன்; ஆனால் போர் புரிந்து அனுபவமில்லாதவர். அவர் ஒளவையாரிடம் தன்னிடமிருந்த பளபளப்பான போர்க்கருவிகளைக் காட்டிப் பெருமைப்பட்டார். ஒளவையார் நன்றாக ஆலோசித்துவிட்டு “ஆமாம் உமது போர்க் கருவிகள் புத்தம் புதியனவாய்ப் பளபளக்கின்றன. ஆனால் அதியமானின் போர்க் கருவிகளோ முனை முறிந்து நசுங்கியதால் பழுது பார்க்கப்படுகின்றன” என்றார்.

அவர் சொன்னதன் உட்பொருள், “அதியமான் போர் புரிந்து அனுபவப்பட்ட பெருவீரன். ஆனால் நீர் அப்படிப்பட்ட அனுபவம் இல்லாதவர்” என்பதாகும். ஒளவையாரின் பேச்சின் உட்கருத்தை தொண்டைமான் புரிந்துகொண்டார். அவர் “தாயே! அதியமானைப் பழிப்பதுபோல் பேசிப் புகழுகிறீர்கள். அதேவேளை எனக்குப் போர் புரிந்து அனுபவமில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறீர்கள்” என்றார்.

ஒளவையார் “ஆமாம், அதியமானும் உம்மைப் போலவே பெரிய வீரன். நீங்கள் போரிட்டால் எல்லோருக்கும் தீங்கே விளையும்” என்றார். தொண்டைமானின் மனம் மாறியது. அன்றிலிருந்து அவர் அதியமானின் நண்பர் ஆனார். ஒளவையாரின் முயற்சியினால் நிகழவிருந்த போர் தவிர்க்கப்பட்டது. அதன் பின்னர் இரு நாட்டு மக்களும் சஞ்சலமின்றிச் சந்தோசமாக வாழ்ந்தார்கள்.


கொன்றை வேந்தன்

ஒளவையாரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று கொன்றை வேந்தன். இவை எளிமையானவை. அறிவூட்டுபவை. மனனம் செய்வதற்கு இலகுவானவை. அவைகளில் சிலவற்றை நாமும் படிப்போம்.


1)அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

(தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்களாவர்.)


2)எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

(கணிதமும் மொழியும் மனிதருக்கு இரு கண்கள் போன்றவை.)


3)ஏவா மக்கள் மூவா மருந்து

(தாய் தந்தை சொல்வதற்கு முன்னரே அவர்கள் விருப்பமறிந்து செய்யும் பிள்ளைகள் பெற்றோருக்கு தேவாமிர்தம் போன்றவர்கள்.)


4)குற்றம் பார்க்கில் சுற்றமில்லை

(மற்றவரின் தவறுகளைப் பெரிதுபடுத்தினால், உறவினர்கள் இருக்கமாட்டார்கள்.) சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் (சோம்பல் உடையவர்கள் வருந்தி அலைவார்கள்.)


5)தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை.

(தாயைவிடச் சிறந்த கோயில் இல்லை.)


6)நுண்ணிய கருமமும் எண்ணித்துணி

(சிறிய வேலையையும் நன்கு ஆலோசித்த பின்னர் செய்யவேண்டும்.)


7)மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்

(பெரியவர்கள் சொல்கின்ற வார்த்தைகள் அமுதம் போல இன்பம் தருபவை.)


8)ஊக்கமுடைமை ஆக்கத்திற்கு அழகு

(முயற்சி உயர்வை உண்டாக்கும்.)


9)வைகல் தோறும் தெய்வம் தொழு

(தினமும் கடவுளை வணங்கு)


10)ஓதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்

(நல்ல நூல்களைப் படிக்காதவரிடத்தில் நல்ல எண்ணமும் ஒழுக்கமும் இருக்காதெனலாம்)