பாடம் 19:நான் விரும்பும் தொழில்

“செய்யுந் தொழிலே தெய்வம்” என்று கூறினார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஒருவரால் என்ன தொழிலை விருப்பமுடன் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதனையே அவர் தனது வாழ்க்கையில் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனைக் கடவுள் போலப் பாவித்துச் செய்யவும் வேண்டும். நான் பணத்திற்காகவும் புகழுக்காகவும் மாத்திரம் தொழிலைச் செய்வதனை விரும்பமாட்டேன்.

கடந்த காலங்களில் ஒருவருடைய தொழிலைக் கொண்டு அவர்களைச் சமுதாயத்தில் தாழ்த்தியும் அல்லது உயர்த்தியும் வைத்திருந்தனர். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் என்ன தொழிலைச் செய்தாலும் நன்றாக வாழலாம். ஆனால் வருமானத்திற்கு ஏற்பச் செலவுகள் செய்யாமல் மற்றவர்களைப் பார்த்துத் தாமும் அப்படி வாழவேண்டும் என்று எண்ணினால் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகள் எல்லோரும் கல்விமான்களாக வரவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராகவும் இருக்கிறார்கள். எனக்கு எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. நான் ஒரு பத்திரிகை ஆசிரியராகவோ, அல்லது ஓர் எழுத்தாளன் ஆகவோ வருவதையே விரும்புகிறேன். எனது தம்பி வாகனம் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அவன் ஒரு சாரதியாகவே வர விரும்புகிறான். ஆனால் எமது பெற்றோருக்கு நாங்கள் இருவரும் வைத்தியர்களாகவோ அல்லது பொறியியலாளர்களாகவோ உயர்கல்வி கற்க வேண்டும் என்பதே நெடுநாள் ஆசை.

ஆனால் அவர்கள் எனது விருப்பத்தின்படி எனது உயர்கல்வியைத் தொடருவதற்கு ஆதரவு காட்டுவார்கள் என்றே எதிர்பார்க்கின்றேன். சமுதாயத்தின் குரலாக விளங்கும் பத்திரிகைத் துறையில் பயிற்சி பெற்று சமூகத்தின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுக்கும் சுதந்திரம் கொண்ட எழுத்தாளன் ஆவதே எனது இலட்சியமாகும். எமது தொழில் எமக்கும், எம்மைச் சூழ்ந்தவர்கட்கும் சமுதாயத்திற்கும் பயன்படுதல் வேண்டும் என்பது எனது உள்ளக் கருத்தாகும்.