பாடம் 1 : பாடசாலை

பாடசாலை சென்றிடுவோம்

பாடங்கள் பல படித்திடுவோம்

நல்ல நல்ல பண்புகளை

நாளும் நாமும் வளர்த்திடுவோம்

எண்ணும் எழுத்தும் கற்றிடுவோம்

இனிதே கலைகள் பயின்றிடுவோம்

ஆடிப்பாடி மகிழ்ந்திடுவோம்

ஆனந்தமாக வாழ்ந்திடுவோம்.

முகிலனின் பாடசாலை

முகிலனின் பாடசாலை இலண்டனில் உள்ளது. அவனது பாடசாலையின் பெயர் சென்ற் மேரிஸ் உயர்நிலைப் பாடசாலை. அப்பாடசாலை மிகவும் பெரியது ,அழகானது பல மாடிக் கட்டிடங்கள் இங்கு உள்ளன. சுமார் ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். அறுபது ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், கணினி, சங்கீதம் போன்ற பாடங்கள் இங்கு கற்பிக்கப் படுகின்றன. இப் பாடசாலையில் நூல் நிலையம், விஞ்ஞான ஆய்வுக்கூடம், கணினிக் கூடம், விளையாட்டு மைதானம், சங்கீத அறை என்பன உள்ளன.

முகிலனது பாடசாலையில் விளையாட்டுப் போட்டி, நத்தார் விழா, விஞ்ஞான கண்காட்சி, பெற்றார் தினம் என்பன வருடாந்தம் நடைபெறும்

முகிலன் வார இறுதி நாட்களில் அருகில் இருக்கும் தமிழ்ப் பாடசாலைக்குச் செல்வான். அங்கே பல தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியும், நுண் கலைகளும் கற்கிறார்கள். பல தமிழ் மாண வர்களை அங்கே சந்தித்துத் தமிழில் பேசி மகிழவும், தமிழ்க் கலாசார முறைப்படி ஆடைகள் அணிந்து செல்லவும் முகிலன் மிகுந்த ஆர்வம் காட்டுவான். அநேகமாகத் தமிழ் பாடசாலைக்கு எல்லா மாணவர்களும் தமிழ்க் கலாசார முறைப்படி ஆடைகள் அணிந்து வருவார்கள். தமிழ்ப் பாடசாலையில் இருக்கும்போது, எமது சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வு வருகிறது என்று முகிலன் நண்பர்களுக்குச் சொல்லி மகிழ்வான்.