பாடம் 6: விடுகதைகள்

ஒட்டி வளர்த்தாலும் - அவனை வெட்டி எறிவோம்.

அவன் யார்?


அண்ணனுக்கு ஒட்டாது. தம்பிக்கு ஒட்டும்.

அது என்ன?


அடித்து நொறுக்கி அனலில் போட்டால் அழகாய் மணக்கும் புகையாய்ப் பறக்கும்.

அது என்ன?


இரட்டைக் கிளையில் ஒற்றை ஓணான்.

அது என்ன?


ஒரு பூதான் பூக்கும். நூறுக்குமேல் காய் காய்க்கும் விருந்தென்றால் இலைகள் தரும்.

அதைத் தெரிந்திருந்தால் நீர் கூறும்.


வலது கையால் தொடமுடியாது. ஆனால் இடது கையால் தொட முடியும்.

அது என்ன?



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடி மகிழ்வோம்


நிலவு

1. மீனினம் ஓடிப் பறக்குதம்மா - ஊடே

வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா

வானும் கடலாக மாறுதம்மா - இந்த

மாட்சியில் உள்ளம் மூழ்குதம்மா.


2. அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா - அயல்

ஆம்பலும் கண்டு களிக்குதம்மா

இம்பருலகின் இயல்பி தம்மா - மதிக்கு

இன்னார் இனியாரும் உண்டோ அம்மா.


3. சின்னஞ் சிறுவில்லாய்க் கண்டதம்மா - பின்னர்ச்

செம்பொற் குடம்போலே தோன்றுதம்மா

என்ன அதிசயம் பாராயம்மா - ஈதோர்

இந்திர சாலமோ கூறாயம்மா.


4. வளர்ந்து வளர்ந்து பெருகுதம்மா - உடல்

வட்டம் திருந்தி வருகுதம்மா

தளர்ந்து தளர்ந்துபின் போகுதம்மா - கண்ணில்

சற்றும் தெரியாமல் ஆகுதம்மா.


- கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை


(அம்புயம் - தாமரை) (இம்பர் + உலகு)