அது ஒரு விடுமுறை நாள். விநோத்தும் அவனது நண்பர்களும் மாமாவுடன் பூங்காவில் அமர்ந்திருந்தார்கள்.
"நான் ஒரு புதிர் போடட்டுமா?" என்றார் மாமா. பிள்ளைகள் ஆர்வத்துடன் "சரி, சொல்லுங்கள். விடை கண்டுபிடிக்கிறோம்." என்றார்கள்.
அவர் கைக்குட்டை ஒன்றைத் தரையில் விரித்தார். அதில் செவ்வக வடிவில் உள்ள பெரிய அட்டைப் பெட்டி ஒன்றை வைத்தார். அதன்மீது சற்று சிறிய அட்டைப் பெட்டியை வைத்தார். மேலும் சிறிய அட்டைப் பெட்டி ஒன்றை இரண்டாவதன் மேல் வைத்தார். இப்பொழுது கைக்குட்டையின் மேல் ஒன்றன்மேல் ஒன்றாக மூன்று அட்டைப் பெட்டிகள் இருந்தன.
இரண்டு கைக்குட்டைகளை அவற்றின் அருகே அடுத்தடுத்து விரித்தார் அவர்.
"நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். முதல் கைக்குட்டையில் உள்ளது போன்றே அட்டைப் பெட்டிகளை இரண்டாம் கைக்குட்டைக்கு மாற்ற வேண்டும்.
அதாவது பெரியதன் மேல் சிறியது. சிறியதன்மேல் அதனிலும் சிறியது என்று வைக்க வேண்டும்.
விதிமுறைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு முறையில் ஒரு பெட்டியை மாத்திரம் எடுக்க வேண்டும். ஒருபோதும் சிறிய பெட்டியின்மீது பெரிய பெட்டியை வைக்கக் கூடாது.
தேவை ஏற்பட்டால் பெட்டிகளை வைக்க மூன்றாவது கைக் குட்டையைப் பயன்படுத்தலாம்.
பெட்டிகளை ஒன்றன்மீது ஒன்றாக வைக்க வேண்டுமே தவிர பக்கத்தில் வைக்கக்கூடாது.
இந்த முயற்சியில் உங்களால் வெற்றி பெற முடியுமா" என்றார் மாமா.
சிறுவர்கள் சிந்தனையில் மூழ்கினார்கள். பெட்டிகளை இடம் மாற்றி வைத்துப் பார்த்தார்கள்.
முக மலர்ச்சியுடன் நரேன் ஏழே தடவைகளுக்குள் பெட்டிகளை மாற்றிக் காட்டினான்.
அவன் எப்படி மாற்றியிருப்பான்? சொல்லுங்கள்.