பாடம் 8:வீடுகள்

ஆதிகாலத்தில் மனிதன் மிருகங்களோடு காட்டில் வாழ்ந்தான். குகைகளில் வாழ்ந்த மனிதன் தனது பகுத்தறிவினால் வாழ்வதற்கேற்ற வீடுகளைக் கட்டினான். இலை, தளை, தோல் கொண்டு குடிசைகள் அமைத்தான். அவற்றுடன் கல்லாலும், மண்ணாலும், மரங்களினாலும் சிறிய பாதுகாப்பான குடிசைகள் அமைத்தும் வாழ்ந்தான். பெரும்பாலான உறைவிடங்கள் நீர் நிலைகளுக்கு அருகிலே அமைக்கப்பட்டன. மனிதர் வாழும் இடத்தை வீடு, இல்லம், மனை, அகம் என அழைப்பர்.


தற்கால வீடுகளில் சுற்றுச்சுவர், உட்சுவர், கூரை, கதவு, யன்னல் என்பன இருப்பதைக் காணலாம். ஆனால் பல மாடிக் கட்டிடங்களில் பல்வேறு வடிவிலான நவீன அமைப்புகளைக் காணமுடியும். வ Pடுகளில் வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை, சாப்பாட்டு அறை, குளியல் அறை, கழிவறை, படிக்கும் அறை, பண்ட அறை, பூசை அறை என அறைகளைப் பிரித்து வைத்திருப்பதையும் காணலாம்.




ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் காலநிலைகளுக்குப் பொருத்தமான வீடுகளை பொருளாதார வசதிக்கு ஏற்றபடி அமைத்து வாழ்கின்றனர். விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் மக்கள் இப்போது இரும்பு, சீமெந்து, , கல், மணல், கண்ணாடி, மரம் போன்றவைகளைக் கொண்டு பெரிய வீடுகளை அமைத்து வாழ்கிறார்கள். மின்சாரம், எரிவாயு, தண்ணீர், தொலை தொடர்புச் சாதனங்கள் என்பன பல மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டுவரப்படுகின்றன. குளிர் நாடுகளில்

வீடுகள் மின்சாரம், நிலக்கரி போன்றவற்றால் வீடுகள் வெப்பமாக்கப்படுகின்றன. அதேபோல் வெப்பநாடுகளில் வீடுகள் குளிரூட்டப்படுகின்றன. ஒவ்வொருவரும் தமது வசதிக்கு ஏற்பச் சிறிய வீடுகள் தொடக்கம் பெரிய மாளிகைகள் வரை அமைத்து வாழ்கிறார்கள். தாயகத்தில் தமிழ் மக்கள் வாழும் பல வீடுகளின் முன்னால் ஒரு முற்றம் இருக்கும். இதனைத் தினமும் துப்புரவு செய்து அழகாக வைத்திருப்பார்கள். அங்கு பல கொண்டாட்டங்களும் நடைபெறும். சிறுவர் ஓடி விளையாடுவதற்கும் அது பயன்படும். இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீட்டிற்கு முன்னால் சிறு தோட்டமும், பின்னால் பெரிய தோட்டமும் அமைந்திருப்பதைக் காணலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இங்கே மக்கள் அழகான பூமரங்களும், காய் கனி வகைகளும் வளர்ப்பார்கள்.

பெரும்பாலான மக்கள் தமது பிறந்த இடங்களிலேயே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்தார்கள். இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் புலம் பெயர்ந்தாலும் தமது இடங்களை விட்டு இலகுவில் அவர்கள் நீங்குவது இல்லை. கடந்த நூற்றாண்டுகளில் இடம் பெறும் அரசியல் சமுதாய மாற்றங்கள் காரணமாக மக்களின் இடப் பெயர்ச்சி அதிகரித்து வருகின்றது. நிரந்தரம் அற்ற புதிய முறையான குடியிருப்புகள் பெருநகரங்களை அண்டித் தோன்றுகின்றன. வளர்முக நாடுகளில் இருந்து மனிதர் பல்வேறு காரணங்களால் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.

தொழிற்புரட்சியின் பின்னர் உலக மக்கள் தொகை பெரும் வளர்ச்சி கண்டது. புதிய நகரங்கள் தோன்றின. புதிய முறையான சமுதாய வர்க்கங்கள் உருவாயின. கிராமப்புறங்களில் வசித்துவந்த மக்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேடியும், வசதி மிகுந்த வாழ்க்கை என்ற கவர்ச்சியினால் உந்தப்பட்டும் நகரங்களை நோக்கிப் இடம்பெயர்ந்தார்கள். நகரங்களை அண்டி மக்கள் தொகை பெருகியது. இடப்பற்றாக் குறை காரணமாகக் குறுகிய நிலப்பரப்பில் அதிக தொகை மக்கள் வாழ்ந்தனர். நெருக்கடி காரணமாகப் பொதுச் சுகாதாரம் பாதிக்கப்பட்டது. குற்றச் செயல்கள் அதிகரித்தன. எனவே அரசினரின் கவனம் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இருப்பிட வசதியை சீர்ப்படுத்துவதில் முனைவதனைக் காணலாம்.

மேலதிகமான வீடுகள் கட்டப்பட வேண்டிய தேவை காரணமாகவும் நிலப்பற்றாக்குறை காரணமாகவும் அடுக்கு மாடிகள் கட்டப்பட்டன. அவ்வாறான குடியிருப்புக்கள் நகரங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதன் தேவைக்கு ஏற்றதாக அமைக்கப்பட்டன. இன்று அடுக்கு மாடித் தொடர்கள் இல்லாத நகரங்களே இல்லை எனலாம். அவை பெரும்பாலும் அரசினரால் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றன.