பாடம் 18:கண்ணகியின் கதை

தமிழ்த்தாயை அணிசெய்யும் இலக்கிய ஆபரணங்களில் ஒன்றாகச் சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் போற்றப்படுகின்றது. தேவர், அரசர்களது கதைகளைக் கூறும் மரபிலிருந்து விடுபட்டுச் சாதாரண மக்களின் கதையைக் கூறுவதனால் இதனைக் குடிமக்கள் காப்பியம் என்றும் புரட்சிக்காப்பியம் என்றும் கூறுவர். சேர நாட்டைச் சேர்ந்த இளங்கோ அடிகள் என்னும் துறவியால் இரண்டாம் நூற்றாண்டளவில் இக்காப்பியம் பாடப்பட்டது என்பது இலக்கிய ஆய்வாளர் கூற்றாகும்.

காவிரிப்பூம் பட்டணத்தில் வாழ்ந்த மாசாத்துவான் மகனான கோவலனுக்கும், மாநாய்கனின் மகளான கண்ணகிக்கும் அக்கால முறைப்படி பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இல்லறம் சிறக்க இனிதே வாழ்ந்த இருவரும் ஒரு நாள் மாதவி எனும் கணிகையின் நாட்டிய அரங்கேற்றத்திற்குச் சென்றனர். கோவலன் மாதவியின் நடனத்தால் கவரப்பட்டுத் தனது மனைவி கண்ணகியைக் கைவிட்டுப் பிரிந்து மாதவியுடன் வாழத்தலைப்பட்டான்.

சோழ நாட்டிலே வருடாவருடம் இடம்பெறும் இந்திரவிழாவிற்குச் சென்ற கோவலனுக்கும் மாதவிக்கும், பாடும் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கோவலன் மாதவியை விட்டுக் கணவனையே தெய்வம் என்று போற்றும் கண்ணகியிடம் மீண்டான். தனது அளப்பரிய செல்வத்தை எல்லாம் மாதவிக்கு வழங்கிவிட்டதால் கோவலன் வாணிபம் செய்து பொருள் ஈட்ட விரும்பினான். கண்ணகி தனது மாணிக்கப்பரல் கொண்ட பெறுமதி மிகுந்த காற்சிலம்புகளில்

ஒன்றைக் கோவலனிடம் கொடுத்தாள். சிலம்பை விற்று வரும் பணத்தை மூலதனமாகக் கொண்டு, பொருளீட்டலாம் என்று இருவரும் மதுரை மாநகரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

பல இன்னல்களைக் கடந்து கவுந்தி அடிகளின் துணையுடன் மதுரை மாநகரத்தைச் சேர்ந்தனர். மாதரி என்னும் இடைச்சேரிப் பெண்ணின் பாதுகாப்பில் கண்ணகியை விட்டு விட்டுக் கோவலன் சிலம்பை விற்கப் புறப்பட்டான்.மதுரை நகரக் கடைவீதியில் கண்ணகியின் சிலம்பை விற்க முயன்ற கோவலன் மீது, ராணியின் சிலம்பைத் திருடியதாகப் பொற்கொல்லனால் வஞ்சகமாகப் பழி சுமத்தப்பட்டது. வழக்கை விசாரிக்காது பொற்கொல்லன் சொல் கேட்ட மன்னன், ராணியின் சிலம்பைத் திருடியவனை வாளுக்கு இரையாக்கும்படி கூறினான். பாண்டிய மன்னன் கட்டளைப்படியே கோவலன் மரணதண்டனை அடைந்தான். தனது கணவன் நியாயம் இன்றிக் கொலை செய்யப்பட்டான் என்று அறிந்த கண்ணகி தீராத துயரமும், ஆறாத கோபமும் கொண்டாள்.

தலைவிரி கோலமாக ஒற்றைச் சிலம்புடன் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் அவைக்குச் சென்று நீதி கேட்டு வழக்குரைத்தாள். 'சிலம்பு திருடிய கள்வனைக் கொன்றது குற்றமல்லவே!" என மன்னன் கூறினான். பதிலாகக் கண்ணகி, 'மன்னா! என் கணவன் கோவலன் கள்வன் அல்லன், அவன் கையில் இருந்தது எனது சிலம்புகளில் ஒன்று! மற்றைய சிலம்பு இதோ என் கையில் இருக்கிறது" என்று சீற்றத்துடன் கூறினாள். தனது பட்டத்து ராணியின் சிலம்புகள் முத்துப் பரல்களை உடையன என்று கூறி, உனது சிலம்பு என்ன பரல்கள் கொண்டவை என்று மன்னன் கேட்டதும், கண்ணகி தனது சிலம்பைத் தரைமீது வீசி எறிந்தாள். அச்சிலம்பு உடைந்து மாணிக்கப்பரல்கள் எங்கும் தெறித்ததைக் கண்ட மன்னன் அதிர்ச்சியுற்றான்.

“பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன்

மன்பதை காக்கும் தென்புலம் காவல்

என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்” என்று

தீர விசாரித்து ஆராயாமல் தண்டனை வழங்கிய என்னால் பாண்டிய அரசின் செங்கோல் வளைந்ததே என்று வருந்தி நெஞ்சம் வெடித்து வீழ்ந்து இறந்தான். அதனைக் கண்ட அரசி கோப்பெருந்தேவியின் உயிரும் அக்கணமே அவளைவிட்டு நீங்கிற்று. கற்பிற் சிறந்த கண்ணகியின் சினத்தால் அந்தணர், அறவோர், பசுக்கள், பத்தினிப்பெண்கள், குழந்தைகள் ஆகியோர் தவிர்த்து மதுரை மாநகரம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

தனது கடும் சினம் தணிந்த கண்ணகி மேற்குத் திசை நோக்கிச் சேரநாடு சென்றாள். அங்குள்ள திருச்செங்குன்றின் மிதிருந்து விண்ணிலிருந்து கோவலனுடன் வந்த விமானத்தில் ஏறித் தேவலோகம் சென்றாள். அதனைக் கண்ட மலைக்குறவர்கள் சேர மன்னன் செங்குட்டுவனிடம் சென்று, தாம் கண்டவியப்பைக் கூறினர். அவன் வடநாடு சென்று, கனகவிசயர் தலையில் கல்லேற்றி வந்து கண்ணகிக்குச் சிலை எடுத்து வழிபட்டான்.

பெண்ணின் பெருமை, விதியின் வலிமை, அரசியலில் நீதியின் அவசியம் ஆகிய மூன்று தருமங்களின் முக்கியத்துவத்தை வற்புறுத்தும் சிறப்புடைய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். மேலே கூறப்பட்ட சமுதாயத்தில் போற்றப்பட வேண்டிய அறங்களை நிலைநாட்டவே இக்காப்பியம் எழுதப்பட்டதாகப் புலவர் கூறுகின்றனர். அரச ஆட்சியில் ஈடுபடுபவர் மட்டுமன்றிச் சாதாரண மக்களாலும் போற்றப்பட வேண்டிய பண்புகளைச் சிலப்பதிகாரம் வலியுறுத்துகின்றது.

இந்நூலின் மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும், தமிழர் நாகரீகத்தினையும், பிறநாட்டு வாணிபத்தில் தமிழர் திரைகடல் ஓடி ஈடுபட்டமையையும் அறிய முடிகிறது. மேலும் செழிப்பு மிகுந்த நாட்டு வளமும், பல வசதிகள் கொண்ட நகர அமைப்புகளும் சிறந்தோங்கி இருந்தமையையும் அறிய முடிகிறது. நுண்கலை, நகர அமைப்பு போன்றவற்றின் பல்வேறு அரிய செய்திகளும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. இந்த நூலின் மூலம் தமிழர் நாகரீக மேம்பாட்டின் தொன்மையும், மேன்மையும் துலங்குவதனைப் படிப்பவர்கள் யாவரும் அறியக் கூடியதாக உள்ளது.