பாடம் 13: நமக்குதவும் ஞாயிறு

உலக மக்கள் யாவரும் ஞாயிறு அல்லது சூரியனில் தங்கியே வாழ்கின்றனர். நம் முன்னோர் பல நூற்றாண்டுகளுக்கு முன் சூரியனின்றி எதுவும் நிகழாது என உணர்ந்தனர். திராவிட மக்கள் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோர்) சூரியனுக்குப் பல பெயர் கொடுத்துச் சூரிய பகவான் எனப் பெயரிட்டு வணங்கினர்.

தமிழ் பேசும் மக்கள் ஜனவரி மாதத்தில் தனு இராசியிலிருந்து மகர ராசிக்கு சூரியன் பிரவேசிக்கும் நாளைத் தை மாதத்தின் முதல் நாளாகக் கொள்வார்கள். அந்த நாளைத் தைப்பொங்கல் விழாவாகக் கொண்டாடுவது தமிழர் மரபு ஆகும். தமிழ்நாட்டு அரசு இந் நாளைத் தமிழரின் புத்தாண்டாகப் பிரபலப்படுத்தி உள்ளது.

தை பதினாலிலிருந்து ஆனிவரை பூமியின் வட அரைக் கோளத்துக்கு சூரிய ஒளியும் வெப்பமும் கூடுதலாகக் கிடைக்கின்றது. தை மாசியில் நெற்பயிர்கள் முற்றியபின் அறுவடை செய்வர். பங்குனிக்குப் பின் மரங்கள் பூத்துக் காய்க்கும். மேல் நாடுகளில் பனிக்காலம் அகன்று வசந்த காலம் வருகின்றது.

இன்று சூரியனைப் பற்றி அறிவியல் வழி உண்மைகள் அறியப்பட்டுள்ளன. 1609 ஆண்டு வரை சூரியன், புதன், வியாழன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் (கோள்கள்) பூமியைச் சுற்றி வந்தன என நம்பினர். அக்காலத்தில் சனி,யுரேனஸ், நெப்ரியூன் ஆகிய கிரகங்கள் இருப்பது அறியப் படவில்லை. கோபனிக்கஸ் சூரியனைக் கோள்கள் வலம் வருகின்றன என்ற சூரிய மையக் கொள்கையை அறியப்படுத்தினார். ஆனால் நிரூபிக்கவில்லை. 1609ஆம் ஆண்டு கலிலேயோ எளிமையான தொலைகாட்டி மூலம் புதனின் நான்கு சந்திரன்களும் பூமியின் சந்திரனைப் போல் வளர்தலையும் தேய்தலையும் காட்டுவதைக் கண்டு, சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்பதை நிரூபித்தார்.

சூரியன் பூமியிலிருந்து 93 மில்லியன் மைல் தூரத்திலுள்ளது. பூமியைவிட 332,000 மடங்கு பாரமானது. 108 மடங்கு குறுக்களவில் பெரியது. ஐதரசன் ஹீலியம் என்னும் வாயுக்களால் ஆனது. ஐதரசன் வாயு எரிந்து கதிர் வெப்பத்தையும் ஒளியையும் தருகின்றது. சூரியனிலிருந்து வரும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 செக்கன் ஆகும். நிலா தரும் தண் ஒளி சூரிய ஒளி நிலாவில் பட்டுத் தெறிப்பதால் கிடைக்கின்றது.

சூரியன் தரும் வெப்பமும் ஒளியும் பூமிக்கு இன்றியமையாதன. சூரிய ஒளியினால் பச்சிலைகள் உணவு தயாரிக்கின்றன. எல்லா விலங்குகளும் தாவரங்களில் இருந்தே உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் உணவு தயாரிக்கும் போது விலங்குகள் வெளிவிடும் கரியமில வாயுவை உள்ளெடுத்து உயிரினங்கள் சுவாசிப்பதற்கு வேண்டிய பிராண வாயுவைத் தருகின்றன.

சூரிய வெப்பத்தால் பூமியிலுள்ள நீர் ஆவியாகி, முகிலாகிப் பின் மழையாகவும், வெண்பனி ஆகவும் பூமிக்குக் கிடைக்கின்றது. நீர் எல்லா உயிர்களுக்கும் இன்றி அமையாதது. சூரிய வெப்பத்தினால் காற்றுச் சூடாகி மேலெழ குளிர் காற்று பூமி மீது வீசுகின்றது.

பகல் இரவு, பூமி ஒரு நாளில் ஒருமுறை சுற்றும் போது ஏற்படுகின்றது. காலங்கள் பூமி சூரியனை வலம் வருவதால் ஏற்படுகின்றது.