இடம் : எலியூர் ஒலிபெருக்கியுடன் பறை அடிக்கும் எலி வருகின்றது.
எலி : (டும் டும் டும் மேளம் அடிக்கிறது)
(மேளம் அடிக்கப்படும் - டும் டும் டும்) அன்று மாலை (ஊர் எலிகள் கூடுகின்றன. ஆளுநர் எலியனார் மேள தாளங்களுடன் மேடைக்கு வருகிறார்.)
ஆளுநர் எலி : என் அருமை மக்களே! எம்மைப் பிடித் தழிக்க பகைவன் வைத்த பொறிகளில் தந்திரமாக கருவாட்டுத் துண்டுகளை அகற்றி, எம்மக்கள் ஏமாறாது காத்த காவல் துறை வீரன் சுட்டி எலியனாருக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. அவர் செய்த தீரவீரச் செயலுக்கு மதிப்பளித்து இப் பொற் பதக்கத்தைச் சூட்டுகிறேன். (பதக்கம் அளிக்கப்படுகிறது - கைதட்டல்)
ஆளுநர் எலி : ஒற்றன் எலியனாரே நீர் கொண்டுவந்த செய்தியை இ;ங்கே வந்து கூறும். (ஒற்றன் எலி மேடைக்கு வருகின்றார்)
ஒற்றன் எலி : ஆளுநர் அவர்களே, நண்பர்களே! வீரன் சுட்டி எலியனாருக்கு நன்றி
(உங்கள் கீச்சல்களால் ஆர்ப்பரியுங்கள். கீச்சு கீ கி கீச்சு கீ கி சத்தம் ஒலிக்கிறது)
நண்பர்களே! மாற்றான் எங்களைக் கொன்றழிக்க இன்னொரு பயங்கரமான திட்டம் வகுத்துள்ளான். கரிய பூனையார் ஒருவரை வரவழைத்துள்ளான். அவன் இரவில் பதுங்கித் திரிந்து எங்களைக் கொன்று தின்னுவான். எங்கள் குலம் அழியப் போகின்றது.
ஆளுநர் எலி : அப்படியா! மாற்றான் எங்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியுள்ளான். இதை நாம் முளைக்கு முன் கிள்ளிவிட வேண்டும். உங்களில் பல புத்திமான்கள் இருக்கிறீர்கள் யோசித்து வழி சொல்லுங்கள்.
(சற்று மௌனம் நிலவுகிறது)
இளம் எலி : நான் வயதில் சிறியவன், எனக்கு, ஒரு வழி தோன்றுகின்றது. ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்கள். பூனையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டினால், மணியின் 'டிங்' 'டிங்' சத்தம் கேட்கும்போது நாங்கள் ஓடித் தப்பலாம்.
கிழ எலி : நான் ஒரு கிழ எலி. தம்பியின் யோசனை நல்ல யோசனை தான்! ஆனால் பூனைக்கு மணிகட்ட முடியுமா? கட்டப் போகும் எலியை, பூனை சும்மா விடுமா?
(சிரிப்பொலி)
யோகி எலி : ஆளுநரே! நான் தவஞ் செய்யும் யோகி. மணி கட்டும் வேலையை என்னிடம் விட்டு விடுங்கள். இரண்டு நாட்களுக்கு எல்லா எலிகளும் இரவில் நடமாடக் கூடாது எனக் கட்டளையிடும்.
(அடுத்த நாள் இரவு யோகி எலி மணியுடன் உலாவுகின்றது. பூனை வருகின்றது. எலி மணியை அடித்தவாறு பூனையிடம் செல்கின்றது)
எலி : பூனையாரே! நான் தவம் செய்யும் எலி. எலும்பும் தோலுமாக இருக்கிறேன். இந்த மணியை ஒரு அரசகுமாரனுக்கு கொடுத்து விட்டால் நான் சமாதானத்துடன் இறக்கலாம். இது யானைகளுக்குரிய மணி.
பூனை : எனக்கும் இது பொருந்தும் தானே! உம்மிடம் ஒரு கேள்வி. இந்த ஊரில் ஒரு எலிகளையும் காணவில்லையே.
யோகி எலி : நீங்கள் இந்த மணியைக் கட்டிக்கொண்டு இரவில் வந்தால் எலிகள் விடுப்புப் பார்க்க வெளியே வரும். இரண்டொரு எலிகளை இலகுவாகப் பிடிக்கலாம். நான் சொன்னதாகக் கூறிவிடாதீர்;. குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு என்று எனக்குப் பட்டம் சூட்டி அடித்து விடுவார்கள்.
பூனை : நீர் ஒரு யோகி@ உமது சொல்லை நான் நம்புகிறேன். அந்த மணியை எனக்குக் கட்டிவிடும்.
(யோகி எலி பூனைக்கு மணியைக் கட்டிவிடுகின்றது. பூனை மணி அடித்தவாறு ஆடுகின்றது) யோகி எலி : உண்மையில் நீங்கள் ஒரு அழகிய அரசகுமாரன்தான். என்ன வடிவு!
(அடுத்த நாள் எலிகள் எல்லாம் ஓடித் திரிகின்றன. பூனை மணி அடித்தவாறு ஆடி ஆடி வருகின்றது. எலிகள் எல்லாம் ஓடி மறைகின்றன. யோகி எலி வருகின்றது)
பூனை : யோகியாரே! மணி ஓசை கேட்டதும் எலிகள் எல்லாம் ஓடி மறைகின்றனவே. எனக்கு இந்த ஊரில் உணவே கிடைக்காது போலிருக்கிறது.
யோகி எலி : அரசகுமாரனே! உங்களுக்கு மரியாதை செய்வதற்காக அவை ஓடி மறைகின்றன. உங்களுக்கு ஒரு நற்செய்தி. அடுத்த ஊரில் பெண்கள் பூனைகளைச் செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள். உங்களுக்கு எலியே பிடிக்கத் தேவையில்லை. வகை வகையான உணவை நேரம் தவறாது தருவார்கள்@ மடியில் வைத்துத் தடவிக் கொஞ்சி செல்லம் கொட்டுவார்கள். சென்று பாரும்.
பூனை : அப்படியா! உழைக்காமல் உண்ண முடியுமானால் நான் அங்கு செல்கிறேன்.
(பூனை செல்கின்றது. எலிகள் வருகின்றன)
யோகி எலி : இனிமேல் எலிகள் பயப்படத் தேவையில்லை. பூனையாரைத் தந்திரமாக அடுத்த ஊருக்கு அனுப்பிவிட்டேன்.
எலிகள் : பூனை இல்லா ஊரில் எலிக்குக் கொண்டாட்டம்.
(யோகி எலியைச் சுற்றி அசைந்து எலிகள் பாடுகின்றன)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.ஆடுவோம் பாடுவோம் அன்பர் எலிகளே!
சூடுவோம் பட்டமே சூரர் யோகிக்கே!
கூடுவோம் நண்பரே கூத்து ஆடவே
பாடுவோம் யோகியை போற்றி ஏற்றியே!
2.காத்தாரே எம்மையே களிக்க வைத்தாரே
சாத்துவோம் மாலையும் சிலையும் வடிப்பமே
ஆடுவோம் பாடுவோம் அன்பர் எலிகளே!
சூடுவோம் பட்டமே சூரர் யோகிக்கே!