பாடம் 11 : வீட்டுவேலை

கண்ணன் மிகவும் சுறுசுறுப்பான சிறுவன். அவன் தினமும் அருகில் உள்ள பண்ணைக்குச் சென்று அங்குள்ள குதிரைகளைப் பார்த்து மகிழ்வான். பண்ணைச் சொந்தக்காரருடைய பிள்ளைகள் குதிரை மீது ஏறி அவற்றை ஓட்டுவதைப் பார்க்கும்போது தானும் அப்படி ஒரு நாளாவது செய்ய வேண்டும் என்று நினைப்பான். ஒருநாள் யாரும் இல்லாத வேளையில் அருகிலிருந்த பண்ணைக்குச் சென்று நிலத்தில் நித்திரையாகப் படுத்திருந்த ஒரு குதிரை மேலே ஏறுவதற்கு முயன்றான். கண்ணனது செயலைக் கண்டு திடுக்குற்ற குதிரை தீடீரெனத் துள்ளி எழுந்தது. மறுகணம் கண்ணன் நிலத்தில் தொப்பென்று வீழ்ந்தான். அவனது வலது காலில் பலமாக அடி பட்டுவிட்டது. அதன் பின்னர் ஒரு வாரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவன் பாடசாலைக்குச் செல்லவில்லை. அந்த நிகழ்வுக்குப் பிறகு ஒருநாளும் அவன் அப்படியான குறும்புகளைச் செய்யவில்லை.


பொருள் அறிவோம்

சுறுசுறுப்பு - ஊக்கம் அருகில் - பக்கத்தில்
முயன்றான் - முயற்சி செய்தான் வாரம் - கிழமை
நிகழ்வு - சம்பவம் குறும்பு - குழப்படி செய்தல்
மறுகணம் - அடுத்த நிமிடம்

1. கேள்வ்விகளுக்கு விடை எழுதுக.

(1). பண்ணைகளில் எவற்றைக் காணலாம்?

(2). பண்ணையில் யார் குதிரை ஓட்டினார்கள்?

(3). குதிரைகளால் நாம் பெறும் நன்மைகள் எவை?

(4). கண்ணன் என்ன செய்ய முயற்சித்தான்?

(5). நாம் அப்படிச் செய்யலாமா?

(6). கண்ணன் எத்தனை நாள் குதிரை ஓட்டினான்?

(7). நீர் செய்த ஒரு குறும்பை எழுதுக.

(8). உமக்குத் தெரிந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பத்து வரிகளுக்குள் எழுதுக.

(9). குதிரைக்குட்டி எதிலிருந்து வரும்?

(10). குதிரை வீட்டு மிருகமா? காட்டு மிருகமா?