பாடம் 14:தீமையிலும் நன்மை

ஒரு மனிதன் இயந்திரப் படகொன்றில் ஏறி கடற்பயணம் செய்தான். வாரத்தில் ஒரு தடவை இவ்வாறு பயணம் செய்வது அவன் வழக்கம். கரையிலிருந்து வெகுதூரம் சென்று விட்டான். மாலை நேரம் என்பதால் வானத்தில் வெளிச்சம் குறையத் தொடங்கியது. அவன் கரைக்குத் திரும்ப நினைத்தபோது புயல் வீசத் தொடங்கியது. படகு கட்டுப்பாட்டை இழந்தது. அலைகளால் அங்குமிங்கும் அடித்துச் செல்லப்பட்டது. இறுதியில் கவிழ்ந்தது. அம்மனிதன் கடலில் மூழ்கினான்.

காற்று பலமாக வீசியதால் அலைகள் அவனை இழுத்துச் சென்று கரையில் ஒதுக்கின. அவன் வெகுநேரம் மூர்ச்சையுற்றுக் கிடந்தான். விடிந்தபோது மயக்கம் தெளிந்தான். அது ஒரு சிறிய தீவு. உதவிக்காகக கூக்குரலிட்டான். யாரும் வரவில்லை. அது மனிதர்கள் யாருமில்லாத தீவு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் மட்டுமே தெரிந்தது.

நாட்கள் கழிந்தன. அம்மனிதன் துயரத்தோடு நாட்களைக் கடத்தினான். அந்தத் தீவின் பக்கமாக கப்பல் எதுவும் வரவில்லை. தப்பிச் செல்ல வழியும் இல்லை. வேறு வழியில்லாமல் தீவில் தன்னந்தனியாக வாழப் பழகினான். மீன்களைப் பிடித்தும் தீவிலிருந்த பழங்களைப் பறித்தும் உண்டு வாழ்ந்தான். கற்களை உராய்ந்து தீமூட்டினான். அடுப்பு மூட்டிச் சமைத்தான். தனக்கென ஒரு மரக்குடிசையை அமைத்துக் கொண்டான்.

ஒருநாள் அவன் உணவு தேடி வெளியில் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவனால் தீயை அணைக்க முடியவில்லை. துயரம் தாங்க முடியாமல் அவன் மணலில் புரண்டு அழுதான். சிறிது நேரம் அழுதுகொண்டே இருந்தான். கடவுளைக் கண்டபடி திட்டினான்.

அப்போது சிறிய கப்பல் அந்தத் தீவை நோக்கி வந்தது. நங்கூரமிட்டு நின்ற கப்பலிலிருந்து சில மனிதர்கள் இறங்கி வந்தனர். நிலத்தில் கிடந்த மனிதனைத் தூக்கி அணைத்துக் கொண்டனர். அம்மனிதனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த அதிசயத்தை அவனால் நம்பவே முடியவில்லை. "நான் இந்தத் தீவில் இருப்பதை எப்படி அறிந்தீர்கள்?" என்று அவன் கேட்டான். அதற்கு அவர்கள், "நீங்கள்தானே புகையை உண்டாக்கி சமிக்ஞை செய்தீர்கள்" என்றார்கள். அம்மனிதன் இருகரங்களையும் கூப்பி முழந்தாளிட்டு தனது அறியாமையை எண்ணி வருந்தி, இறைவனுக்கு நன்றி கூறி வணங்கினான்.