நாங்கள் வீடுகளில் வசிக்கின்றோம். மனிதருக்கு வீடு அத்தியாவசியமானது. நமது வீடுகள் அழகானவை@ பல அறைகளைக் கொண்டவை. மனிதர்கள் மட்டுந்தானா வீடுகளைக் கட்டி வாழ்கின்றார்கள்? பறவைகளும் தாம் குடியிருப்பதற்கு வீடுகளைக் கட்டுகின்றன. அவற்றின் வீடுகளை நாம் கூடுகள் என்போம்.
நம் வீட்டுத் தாழ்வாரங்களில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பறவைகள் கூடு கட்டும் காட்சி பார்க்கப் பார்க்க அலுக்காதது. அக்கம் பக்கத்தில் கிடைக்கும் குப்பை கூளங்கள், சருகுகள், குச்சிகள், உலர்ந்த புல், வேர், பட்டைகள், இறகுகள் என்பனவற்றைக் கொண்டு பறவைகள் கூடு கட்டும். மழை, காற்று என்பவற்றிலிருந்து தம்மைப் பாதுகாக்கவும் இரவு நேரங்களில் அடையவும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கவும் பறவைகள் கூடுகளை அமைக்கின்றன.
சில பறவைகள் கூடு கட்டும் விதம் விசித்திரமானது. “ரென்” எனும் ஒரு வகை பறவை இனத்தில் ஆண் பறவைகளே கூடு கட்டும். ஒரே தடவைகளில் நான்கைந்து கூடுகளை அது கட்டும். அவற்றில் பொருத்தமான ஒன்றைப் பெண் பறவை தேர்ந்தெடுக்கும்.
“மூர்ரென்” (moorhenn) எனும் ஒரு வகைப் பறவை ஆற்றங்கரையில் உள்ள கோரைப் புற்களைக் கொத்தாகக் கட்டி கூடு அமைக்கும். ஆற்றில் வெள்ளம் வந்தால் கூட்டைத் தலையால் முட்டி மேலே உயர்த்திக் கொள்ளும்.
தூக்கணாங்குருவி ((weaver bird) கூடுகளை ஒரே வகையான நார், தும்பு அல்லது வைக்கோல் கொண்டு கூடுகளை உருவாக்கும். அவை மரத்தில் தொங்கும் தொங்கல் கூடுகளாக இருக்கும்.
தையற்குருவிகள் இரண்டு பெரிய இலைகளை ஒன்றாக இணைத்துத் தைக்கும். அதற்குள்ளே சருகுகளையும் இறகுகளையும் பரப்பிக் கூடுகளை அமைக்கும்.
“ஸ்வல்லோ” (swallow) என்னும் குருவிகள் நூற்றுக்கணக்கான களிமண் உருண்டைகளைக் கொண்டு கிண்ணம் போன்ற கூடுகளை அமைக்கும்.
இன்னும் பல நூற்றுக்கணக்கான பறவைகள் விந்தையான கூடுகளைக் கட்டுகின்றன. இந்த விந்தைகளைப் பார்த்து மனிதர்கள் பாடம் கற்கலாம்.