நாங்கள் எமது பெற்றோர், இனத்தவர்கள், சுற்றத் தார், நண்பர்கள் எனப் பலருடன் கூடி வாழுகின்றோம். பிறப்பினால் எமக்கு மிகவும் கிட்டிய சொந்தங்களை எமது குடும்பம் என்று உறவு கொண்டாடுகின்றோம். அவர்களுக்கு வேறு வேறு பெயர்கள் இருக்கின்றன. இருந்தபோதும் நாம் அன்பும் பண்பும் கருதி அவர்களைப் பெயர் கூறி அழைப்பதில்லை. எமது உறவினை அடிப்படையாகக் கொண்டு வேறு வேறு முறைப் பெயர் கொண்டு அழைக்கின்றோம்.
எனது பெயர் பிரியன். அம்மாவும் அப்பாவும் என்னை மகன் என்று அழைப்பார்கள். எனது அண்ணாவும், அக்காவும் என்னைத் “தம்பி ” என்று அழைப்பார். எனது தங்கை குமுதினி என்னை “அண்ணா” என்று அழைப்பாள்.
எமது அம்மாவின் சகோதரனை நாங்கள் “மாமா” என்று அழைப ;போம். அதேபோல் அப ;பாவின் சகோதரியை “மாமி” என்று அழைப்போம். அம்மாவின் அக்காவைப் “பெரியம்மா” என்றும், அப்பாவின் தம்பியைச் “சித்தப்பா” என்றும் அழைப்போம். “இப்படித்தான் தமிழ் மக்கள் எல்லோரும் முறை சொல்லி அழைப்பார்கள்” என்று அம்மா கூறினார். ஆனால் இங்கிலாந்தில் வாழ்வோர் மாமாவையும், சித்தப்பாவையும் “Uncle” என்றுதான் அழைப்பார்கள். மாமா, மாமியின் பிள்ளைகள் எமக்கு மைத்துனர், மைத்துனிகள் என்ற முறை ஆகும்.
அம்மாவின் அம்மாவை “அம்மம்மா” என்றும், அம்மாவின் அப்பாவை தாத்தா அல்லது “அம்மப்பா” என்றும் அழைக்கிறோம். அப்பாவின் அம்மாவை “அப்பம்மா” என்றும், அப்பாவின் அப்பாவை தாத்தா என்றும் “அப்பப்பா” என்றும் அழைக்கிறோம்.
இவர்களைப் பாட்டா, பாட்டி அல்லது பேரன், பேத்தி என்றும் சிலர் அழைப்பார்கள். இவர்கள் எல்லோரும் என்னையும், அண்ணாவையும், தங்கையையும் தமது பேரப்பிள்ளைகள் என்று கூறி மகிழ்வதைப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் சிலருடைய நிழற்படங்கள் இருக்கின்றன. அதில் இருப்பவர்கள் எமது பூட்டன், பூட்டிகள் என்று அம்மா கூறினார். நான் பிறப்பதற்கு முன்னரே அவர்கள் இறந்துவிட்டார்கள். இவர்கள் எனது பெற்றோர்களின், பெற்றோர்களின் பெற்றோர். இவர்களுக்கு நான் கொள்ளுப் பேரன் என்று அம்மா கூறினார்.
எனது நண்பனின் பெயர் கோபால். இவர் எமக்குத் தூரத்து உறவினர் என்று அப்பா கூறினார். நாங்கள் இருவரும் அயல் வீட்டு நண்பர்களுடன் மாலையில் காற்பந்து விளையாடுவோம். தங்கையும் தனது தோழிகளுடன் வலைப்பந்து விளையாடுவாள். நாங்கள் எல்லோரும் அன்பும் பாசமும் கொண்டு ஒற்றுமையாக வாழ்கிறோம்.