பாடம் 4: தமிழ்மொழி

தமிழ் என்றால் இனிமை என்றும் பொருள்படும். செந்தமிழ் என்பதற்குக் கலப்பற்ற தூயதமிழ் மொழி என்பர். உலகில் உள்ள மூத்த மொழிகளிலே தமிழும் ஒன்றாகும். தமிழ் தமிழ்மக்களின் தாய் மொழி. முற்காலத்தில் சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தர் தமிழை வளர்த்தனர். அக்காலத்தில் அரசர்களும் செல்வந்தர்களும், தமிழ்ப ;பாடகர்களும் புலவர்களுக்கும் பொன்னும் பொருளும் கொடுத்துப் பாராட்டிப் போற்றினர். தற்காலத்தில் தமிழ்ப்பற்றாளர்களுடன் அரசாங்கங்களும், பல்கலைக்கழகங்களும், தனிப்பட்ட நிறுவனங்களும் தமிழைப் பேணி வளர்க்கின்றன.

பாரம்பரிய இலக்கியங்களைக் கொண்டு சுயமாகத் தனித்து இயங்கவல்லதாகி, உயிர்ப்புடன் தடை இன்றித் தொடர்ச்சியாகப் பேச்சு வழக்கில் நிலைத்திருக்கும். மேலும் பல சிறப்புக்கள் கொண்ட நமது தமிழ்மொழி “செம்மொழி” ஆகும். உலகில் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் போதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்திய அரசாங்கம் தமிழ் மொழியைச் செம்மொழியாக அங்கீகரித்துள்ளது.. உலகில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அவற்றில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொறீசியஸ், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளின் நிர்வாகத்திலும் தமிழர் பங்கு பற்றுகின்றார்கள்.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றியதாகவும், தொன்மையான மொழிச் சிறப்புக்களை உடையதாகவும், வேறு மொழிகளின் பிறப்பிடமாகவும், பல வளங்களையும், நாகரீகத்தையும் மேம்படுத்துவதற்கு உதவிய மொழியாகவும் இருக்கும் மொழிதான் செம்மொழி எனும் உயர்ந்த மதிப்பீட்டைப் பெறுகின்றது. கிரேக்கம், ஹீப்ரூ,சீனம், சமஸ்கிருதம், லத்தீன், எகிப்தியம், சுமேரியம், பாபிலோனியம் ஆகிய மொழிகளையும் செம்மொழிகளாக உலகம் பேணுகின்றது. தமிழ்மொழி கடந்த காலங்களில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தனக்கே உரித்தான செழிப்பான மொழி வளத்தால், பிறமொழிகளின் துணையின்றித் தனியே தலை நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் கொண்ட செம்மொழியாகும்.

இருபத்தாறு மொழிகளைக் கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழி தமிழ் ஆகும். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் சமீப காலங்களில் தமிழில் இருந்து திரிந்த மொழிகளாகும். தமிழ் இயல், இசை, நாடகம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. இதனை முத்தமிழ் என்று கூறுவர். இயற்றமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசைத்தமிழ் இசையுடன் கலந்தது. நாடகத்தமிழ் கதையும், இசையும், கூத்தும் கலந்து வருவது. தமிழிலே பழைமை வாய்ந்த பல சிறந்த நூல்கள் இருக்கின்றன. அவற்றுள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், தேம்பாவணி, சீறாப்புராணம் போன்றவை மிகவும் சிறந்த நூல்களில் சில எனலாம்.

தமிழ் மொழிக்கு உ.வே, சுவாமிநாத ஐயர், தேசிகவிநாயகம்பிள்ளை, பாரதியார், ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தர், உமறுப்புலவர் போன்ற பற்பலர் அண்மைக் காலங்களில் பெருந் தொண்டாற்றியுள்ளனர். பல ஆயிரக்கணக்கான தமிழ் நாட்டு அறிஞர்கள் மட்டுமன்றிப் பல மேலை நாட்டு அறிஞர்களும் தமிழுக்குப் பெரும் தொண்டு செய்துள்ளார்கள். அவர்களில் றொபேட் கால்ட்வெல், வீரமாமுனிவர், போப் ஐயர் போன்ற பலர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

தமிழ் மொழியின் சிறப்புக்களில் அதன் எழுத்துக்களின் ஒலிப்பு முறையும் ஒன்றாகும். பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும், பதினெட்டு மெய் எழுத்துக்களும் சேர்ந்து இருநூற்றுப்பதினாறு உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. ஆயுத எழுத்துடன் மொத்தமாக இருநூற்று நாற்பத்து ஏழு (12 + 18 + 216 + 1 = 247) எழுத்துக்கள் தமிழ் மொழியில் உண்டு. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழி எனவும் பின்னர் பிராமி எனவும் திரிபுபட்ட தமிழ் எழுத்துக்கள் பண்டைய கல் வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் என்ற சொல் வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று இன எழுத்துக்களும் கொண்டது. தமிழ்மொழியில் இருக்கும் "ழகரம்" பிற மொழிகளில் மிகவும் அரிதாகக் காணப்படும் ஒலிச் சிறப்புக் கொண்டது.

தமிழர்கள் ஒன்று கூடும்போது கடவுள் வாழ்த்துப் பாடுவது போன்று, விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி விழாவை ஆரம்பிப்பார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் பலரால் எழுதப்பட்டபோதும் சுப்பிரமணிய பாரதியாரால் எழுதப்பட்ட “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி” என்ற பாடலும், மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை எழுதிய “நீராரும் கடலுடுத்த” என்று தொடங்கும் பாடலும் மிகவும் சிறந்த பாடல்களாகப் பாடப்படுகின்றன.

தமிழின் சிறப்பினைப் புரட்சிக் கவிஞர் என்று போற்றப்பட்ட பாரதிதாசன் எனும் புலவர் பாடிய பின்வரும் பாடல் மூலம் அறிவோம்.

“தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு வேர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்

தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!- இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!- இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

அரும்சொற்கள்: அமுது - அமிர்தம் (ambrosia), சமுகம் - இனம் (society) விளைவு - வளர்ச்சி (growth), நிலவு - சந்திரன் (moon), மது - இன்சுவைப் பானம் (Nectar), உரிமை - சொந்தம் (entitlement), பயிர் - நெல், வாழை, கரும்பு போன்ற தாவரங்கள் (crops). இளமை - வாலிபம் (youth), வான் - ஆகாயம் (sky) அசதி - சோர்வு (fatigue), தேன் - பூக்களில் பெறப்படும் திரவம் (honey), மழுங்காதது - வைரம் (diamond), வளம் - செழுமை (opulence) உளம் - மனம் (heart), தீ - நெருப்பு (Fire).