ஒருநாள் பெரிய ஒரு மலையின் அடிவாரத்தில் ஓர் ஆடு புல் மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது திடீரெனப் பலமாகக் காற்று வீசியது கார் மேகங்கள் வானத்திலே சூழ்ந்தன. தொடர்ந்த மின்னலும் இடியோசையும் எல்லா மிருகங்களையும் பயங்கொள்ளச் செய்தன. பெருமழை பெய்தது. காட்டு விலங்குகளும், பறவைகளும் தம் இருப்பிடங்களை நோக்கி விரைந்தன. இவற்றைக்கண்ட ஆடு அஞ்சி நடுங்கி அருகில் இருந்த மலைக் குகைக்குள் சென்றது. மழை நின்றதும் தனது இருப்பிடம் செல்லலாம் என்று எண்ணியது
ஆனால் மழை விடாமல் தொடர்ந்து பெய்துகொண்டேயிருந்தது. வெளியே செல்ல முடியாத ஆடு குகையினுள் இருந்த கல்லால் ஆன மேடையில் ஏறிப் படுத்துக்கொண்டது. அதன் கொம்புகள் சுருண்டு இருந்தன் உடல் முழுவதும் மயிர் அடர்ந்து கருமை நிறமாகக் காணப்பட்டது முகத்தில் நீண்ட தாடியும் பெரிய தலையும் உடையதாகப் பார்க்கும்போது பயங்கரமாக இருந்தது. அதன் கழுத்தில் ஒரு மணி தொங்கியது. குளிரில் நடுங்கிய ஆடு அயர்ந்து தூங்கிவிட்டது. சிறிது நேரத்தில் அந்தக் குகையினுள் வழக்கமாகத் தங்கும் சிங்கம் வந்தது. இருளில் பயங்கரமான தோற்றத்துடன் எதுவோ தனது இடத்தில் படுத்திருப்பதைக் கண்ட சிங்கம் “யார் நீ? நான் வசிக்கும் குகையில் உனக்கு என்ன வேலை?” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டது.
சிங்கத்தின் குரலைக் கேட்ட ஆடு என்ன செய்வதென்று ஒரு கணம் சிந்தித்தது. மறுகணம் தன் குரலை மாற்றிக்கொண்டு “ஓ! சிங்கராசாவா! நான்தான் தாடி வீரன். வாருங்கள் உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனது விரதம் இன்றோடு நிறைவேறப் போகின்றது. இதுவரை நூறு புலிகளையும், நூறு யானைகளையும் கொன்று தின்றுவிட்டேன். ஒரு சிங்கம் மட்டும் கிடைக்கவில்லை. நீர் என்னைத் தேடி வந்ததற்கு மிக்க நன்றி. நீர் உள்ளே வருகிறீரா? அல்லது நானே வெளியில் வரட்டுமா?” என்று எழுந்து நின்று தனது தனது உடலைக் குலுக்கியபடி கேட்டது. குகையின் சுவர்களில் அந்தச் சத்தம் மணியொலியுடன் சேர்ந்து பயங்கரமாக எதிரொலித்தது. குகையின் சுவரில் ஆட்டின் நிழல் மிகவும் பெரிதாகத் தெரிந்தது.
பெரிதாகத் தெரிந்த ஆட்டின் நிழலைக் கண்ட சிங்கம் அச்சம் கொண்டு தலை தெறிக்க ஓடத்தொடங்கியது. இதனைக் கண்ட நரி ஒன்று “அரசே! ஏன் ஓடுகிறீர்கள்?” என்று கேட்டது. சிங்கம் தான் கண்டதையும் நடந்தவற்றையும் விபரமாகக் கூறியது. இதனைக் கேட்ட நரி சிரித்தபடி “அரசே! நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அது ஓர் ஆட்டுக்கடா போல் இருக்கிறது. ஓர் அரசன் இப்படிப் பயந்து ஓடலாமா? நானும் உங்களுடன் வருகிறேன். வாருங ;கள் குகையினுள் சென்று பார்ப்போம். உங்களுக்கு அச்சமாக இருந்தால் என்னுடைய வாலுடன் உங்களுடைய வாலையும் சேர்த்துக் கட்டிக்கொள்ளுங்கள்” என்றது.
சிங்கம் நரி சொல்வதில் உண்மை இருப்பதுபோல் உணர்ந்தது. நரி கூறியபடியே அவை வால்களைச் சேர்த்துக் கட்டிவிட்டுக் குகையை நோக்கிச் சென்றன. மீண்டும் சிங்கம் நரியுடன் வருவதைக் கண்ட ஆடு தான் தனது அறிவின் துணை கொண்டே அவைகளை வெல்லவேண்டும் என எண்ணியது. சிறிது யோசித்துவிட்டு “நரியாரே! நல்லது செய்தீர். ஓடிய சிங்கத்தை அழைத்து வாரும் என்றால் வாலில் கட்டி இழுத்து வருகிறீரே. நீர்தான் உண்மையான மந்திரி. எனது விரதமும் இன்றோடு முடியப்போகிறது” என்று கூறித் தலையை மீண்டும் அசைத்தது. கழுத்திலிருந்த மணியும் பலமாக ஒலித்தது.
அதைக்கேட்ட சிங்கம் நடுநடுங்கியது. “ஐயையோ! நான் ஏமாந்துவிட்டேனே! குள்ள நரி என்னை ஏமாற்றிக் கொண்டுவந்துவிட்டதே!” என்று எண்ணியபடி திரும்பி ஓடத்தொடங்கியது. அதே வேகத்தில் நரியால் ஓட முடியவில்லை. கற் பாறைகளிலும், மரங்களிலும் மோதி நரி இறந்துவிட்டது. தனது புத்திக் கூர்மையால் சிங்கத்திடமிருந்து உயிர் தப்பிய ஆடு, விரைவாக ஓடித் தனது பாதுகாப்பான வசிப்பிடம் போய்ச் சேர்ந்தது.