தமிழ் மொழியில் உயர்ந்த கருத்தும், சொல் நயமும் கொண்ட மிகவும் செழிப்பான கவிதைகள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே தோற்றம் பெற்று இருந்தன. ஏறக் குறைய இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே மொழியை அழகுபடுத்தும் இலக்கண வரம்புகள் கொண்டதாகத் தமிழ்க்கவிதைகள் விளங்கின. பண்டைய தமிழ் மன்னர்கள் சங்கம் வளர்த்துத் தமிழை வளர்த்தார்கள். மன்னர் மட்டுமன்றி சிற்றரசர்களும், வள்ளல்களும் கவிஞர்களை ஆதரித்து வந்தார்கள்.
காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடற்கோள்களால் பல நூல்கள் அழிந்து போனதாகச் சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். ஆரம்ப காலக் கவிஞர் பெருமக்கள் வீரத்தினையும், கொடையையும், காதலையும், இயற்கையையும் மிகவும் சிறிய சொற்களால் நுட்பமாகப் பாடி உள்ளனர். அவற்றினை நாம் அகநானூறு, புற நானூறு, பதினெண் க Pழ்க்கணக்கு போன்ற நூல்களில் காணலாம். இந்தப் பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலப்பகுதிகளில் பாடப்பட்டவையாகும். தொல்காப்ப pயர், ஒளவையார், த pருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர் போன்ற பல புலவர்களும் ஒப்பற்ற நூல்களை எமக்கு ஆக்கித் தந்துள்ளார்கள்.
இடைக்காலத்தில் அறத்தையும், நீதியையும், கடவுளையும் போற்றும் கவிதைகள் தமிழ் மொழிக்கு மேலும் மெருகு ஊட்டின. பெண்பாற் புலவரான ஒளவைப் பிராட்டியார் விநாயகப் பெருமானை வேண்டிப் பாடிய வெண்பாவைப் படிப்போம்.
“பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத்தமிழ் மூன்றுந் தா“
(அருஞ் சொற்கள் : கோலம் - அழகு, துங்கம் - தூய்மை, பெருமை, சங்கத்தமிழ் - இயல், இசை, நாடகம்)
தமிழ்க் கவிதைகள் ஆசிரியம், வெண்பா என்று இரு வகைக்குள் அடங்கும் எனப் பழந்தமிழ் நூலான தொல்காப்பியம் கூறுகின்றது. இருப்பினும் பா இனங்கள் ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சி என நான்கு வகையானது என்பது பொதுக் கருத்தாகும். இடைக்காலத்தில் சிந்து, கண்ணி, கும்மி போன்றவைகளும் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறத்தொடங்கின. தமிழ் மொழியில் இரண்டு அடிகளைக் கொண்ட பாடலைக் குறள் வெண்பா என்பர். பின்வருவது திருக் குறளில் வரும் ஒரு குறட்பாவாகும்.
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”
பல காலமாகக் கற்றவர்களால் மாத்திரம் விளங்கிக் கொள்ளும் முறையில் கடுமையான இலக்கண வரம்புகளால் படித்தவர்களால் கவிதைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அதனால் சாமானிய மக்களின் பாடல்கள் அரங்கேற முடியாது, சமுதாய அங்கீகாரம் இன்றி வழக்கில் இல்லாது ஒழிந்து போயின. கடந்த நூற்றாண்டுகளில் பாரதியார் முதலாக, பல கவிஞர்கள் தமிழ் கவிதைத் துறையில் பெரும் புரட்சியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளனர்.
'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே”
என்பது மகாகவி எனப் போற்றப்படும் சுப்பிரமணிய பாரதியாரின் ஒரு பாடலாகும்.
மேலைநாட்டு மொழிகளின் செல்வாக்கினால் தமிழ்க் கவிதைகள் மேலும் வளம் பெறுகின்றன. இன்று புதுக் கவிதை, வசன கவிதை, கைக்கூ கவிதை எனப் பல புதிய கவிதை வடிவங்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. மிகவும் சிறப்பான தமிழ்க் கவிதைகள் மாத்திரம் கால வெள்ளத்தில் அடிபட்டுப் போகாது மக்கள் உள்ளத்தில் நிலைத்து நிற்கும். தற்காலத்தில் திரைப்படம், வானொலி போன்ற ஊடகங்களின் செல்வாக்கால் பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்களின் பாடல்கள் பாமர மக்கள் மனதிலும் நீங்காது இடம்பெறுகின்றன.