தமிழர் வாழ்வுச் சிறப்புகளை விளங்க வைப்பவை கலாசார விழாக்களாகும். விழா என்ற தமிழ்ச் சொல் “விழை” என்ற சொல்லிலிருந்து வந்தது. விழை என்றால் விரும்பிச் செய்வது. கலாசார விழாக்கள் எல்லோராலும் விரும்பிக் கொண்டாடப் படுபவையாகும்.
கலாசார விழாக்கள் பெரும்பாலும் இன, மத பிரதேச அடிப்படைகளில் ஆரம்பிக்கப்பட்டுக் கொண்டாடப் படுகின்றன. அவற்றில் இந்துமதத்தினர் தைப்பொங்கல், சித்திரைப் புது வருடப் பிறப்பு, நவராத்திரி, தீபாவளி போன்ற விழாக்களைக் கொண்டாடுவர். கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர், நத்தார், புதுவருடம் ஆகிய விழாக்களைக் கொண்டாடுவர். இஸ்லாமியர்கள் ரம்ழான், ஹஜ், அல்-ஹிஜ்ரா போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவர். பௌத்த மதத்தினர் வெசாக், போயா போன்ற விழாக்களைக் கொண்டாடுவர். யூத இன மக்கள் சப்பத் (Shabbat)இ ஹஷன்னா (Rosh Hashanah) போன்ற பல விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். இத்தகைய விழாக்களுடன் பிறந்த நாள், பூப்புனித நீராட்டு விழா, காதலர் தினம் (Valentines Day) ஹலோவீன் (Halloween)போன்ற விழாக்களையும் பல நாட்டவர்கள் கொண்டாடுகின்றனர்.
இன்று தமிழ் மக்கள் உலகம் எங்கும் பரவி வாழ்ந்த போதும் அவர்கள் இன, மத பேதமின்றிக் கலாசார விழாக்களில் பங்கு கொள்கின்றார்கள். இவ்விழாக்கள் இடம் பெறும் நாட்கள் பொது விடுமுறைத் தினங்களாகச் சில நாடுகளில் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன. பல்லினக கலாசாரம் உள்ள நாடுகளில் இனங்களுக்கு இடை யே ப ரஸ் ப ர நம் ப pக்கையை யும், புரிந்துணர்வினையும் வளர்ப்பதற்கு இத்தகைய விழாக்கள் வழி கோலுகின்றன. தமிழர் கொண்டாடும் புதுவருடப்பிறப்பு, முன்பு சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ் நாட்டு அரசு தைப்பொங்கல் தினத்தன்று தை மாதத்தில் தமிழர் வருடப்பிறப்பு கொண்டாடச் சட்டம் இயற்றி உள்ளது. புதுவருடப் பிறப்பைத் தமிழர் புனிதமாகக் கொண்டாடுவர். அதிகாலையில் எழுந்து, குளித்துப் புத்தாடை உடுப்பர். இறைவனின் ஆசிபெற பெற்றோர் பிள்ளைகளைக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வர். இறை ஆசிபெற்றுத் தொடங்கும் கருமம், எப்போதும் நன்மை தரும் என்பது தமிழர் மரபாகும். அன்று நல்லவர் கையாலே கைவிசேடம் வாங்குவது அதிஷ்டமானது என்பது தமிழர் நம்பிக்கையாகும். கைவிசேடமாக, பெரியவர்கள் வெற்றிலையில் காசு, நெல், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வைத்துக் கொடுப்பர். வெற்றிலை செல்வப் பெருக்கத்தையும், நெல்லு தானிய நிறைவையும், மஞ்சள் தொற்று நீக்கியாகவும் கருதப்படும்.
புதுவருடப் பிறப்பைக் கிராம மக்கள் ஆர்வத்துடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர். உயர்ந்த மரக்கிளையில் ஊஞ்சல் கட்டப்படும். சிறுவர்களும், பெண்களும் அன்ன ஊஞ்சல் ஆடுவர். குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பலகையின் இரு நுனிகளில் நின்று உன்னுவர். பெண்கள் ஊஞ்சல் பலகையில் பிணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்திருப்பர். ஊஞ்சல் மேலே உயர்ந்து கீழே வரும்போது ஒருவிதமான சிலிர்ப்பு ஏற்படும். கிராமத்தவர்கள் இனிமையாக ஊஞ்சற் பாட்டுக்கள் பாடிக் கேட்போரை மகிழ்விப்பார்கள். புது வருடத்தில் ஆண்கள் பல வீர விளையாட்டுக்களில் ஈடுபடுவர். போர்த் தேங்காய் அடித்தல், கிளித்தட்டு மறித்தல், கிட்டி புள் அடித்தல், பட்டம் ஏற்றுதல் போன்ற விளையாட்டுக்களை ஆண்கள் சவால் செய்து விளையாடுவார்கள்.
மாலை நேரத்தில் மாட்டுச் சவாரி, வாண வேடிக்கை, கரகம், கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டுக்கு உற்றார் உறவினர் வருவர். தித்திக்கும் பண்டங்கள் உண்பர். புதுவருட வாழ்த்துக்கள் கூறுவர். வீட்டாரும் வாய் நிறையப் புதுவருட வாழ்த்துக்கள் கூறுவர். யாவரும் கலந்து உறவாடுவதால் உறவு வளரும், அன்பு பெருகும், குடும்பங்களில் ஒற்றுமை ஓங்கும். நல்லோர் மனம் நிறைந்து புதுவருட தினத்தில் வாயார வாழ்த்துவதனால் வருடம் முழுவதும் எல்லோரும் நிறைவாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை யாவருக்கும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.