1. வேனிற் பருவத்தில் - ஒரு நாள்
வெய்யில் வேளையிலே
ஞானத் தமிழ்க் கடலென்று இந்த
நாடு புகழும் ஒளவை
2. தூரம் மிகநடந்து - களைத்துச்
சோர்ந்து வரும் வழியின்
ஓரத்தில் ஒரு நாவல் - நிழலில்
ஒதுங்கிச் சற்று நின்றாள்.
3. அந்த மரமீதோர் - சிறுவன்
ஆநிரை மேய்க்க வந்தோன்
சிந்தை மகிழ்ந்து நல்ல - கனிகள்
தின்று நிற்றல் கண்டாள்.
4. நா வரளுதப்பா - நாலைந்து
நாவற் கனிபறித்து
தா வென வேண்ட - அவனும்
தருவேன் என்று சொல்லி
5. சுட்ட கனிவேண்டுமோ - அன்றிச்
சுடாத கனிவேண்டுமோ
இட்ட முள்ள கனியைப் - பாட்டிநீ
இயம்பெனக் கேட்டான்.
6. கூறிய அம்மொழியால் - உள்ளம்
குழப்ப மெய்தியப்பால்
தேறி அவளும் அப்பா - சுட்ட
தீங்கனி தா என்றாள்.
7. மெத்தப் பழுத்துலைந்து - கறுத்து
வெடித்த கனியாக
பத்துப் பதினைந்து - நன்றாய்ப்
பறித்து மண்ணிலிட்டான்.
8. ஒட்டிய மண்ணீங்க - கனியெடுத்
தூதி நிற்கையிலே
சுட்ட கனியிதெனச் - சிறுவன்
சொல்லி மறைந்திட்டான்.
9. மாடு மேய்ப்பவனும் - என்னை
மடக்கி விட்டான் என்று
நாடு புகழும் ஒளவை - அன்று
நாணித் தலைகுனிந்தாள்.
10. கந்தன் முருகனே - ஒளவையின்
கருவம் போக்குதற்கிவ்
விந்தை செய்தானென்று - புலவர்
விளம்புகின் றாரம்மா.
---- கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
('கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு' என்ற ஒளவையின் போதனையைப் புலவரின் கற்பனையில் காண்கிறோம்)
வேனில் - வெப்ப காலம் | நாணம் - வெட்கம் |
ஆநிரை - ஆட்டு மந்தை | கருவம் - தற்பெருமை |
இட்டம் - விருப்பம் | விந்தை - புதுமை |
இயம்பு - சொல் | விளம்பு - கூறு |
தீங்கனி - இனிய பழம் | மடக்கு - வெல்லுதல் |