பாடம் 17: ஒளவையும் இடையச்சிறுவனும்

1. வேனிற் பருவத்தில் - ஒரு நாள்

வெய்யில் வேளையிலே

ஞானத் தமிழ்க் கடலென்று இந்த

நாடு புகழும் ஒளவை


2. தூரம் மிகநடந்து - களைத்துச்

சோர்ந்து வரும் வழியின்

ஓரத்தில் ஒரு நாவல் - நிழலில்

ஒதுங்கிச் சற்று நின்றாள்.


3. அந்த மரமீதோர் - சிறுவன்

ஆநிரை மேய்க்க வந்தோன்

சிந்தை மகிழ்ந்து நல்ல - கனிகள்

தின்று நிற்றல் கண்டாள்.


4. நா வரளுதப்பா - நாலைந்து

நாவற் கனிபறித்து

தா வென வேண்ட - அவனும்

தருவேன் என்று சொல்லி


5. சுட்ட கனிவேண்டுமோ - அன்றிச்

சுடாத கனிவேண்டுமோ

இட்ட முள்ள கனியைப் - பாட்டிநீ

இயம்பெனக் கேட்டான்.


6. கூறிய அம்மொழியால் - உள்ளம்

குழப்ப மெய்தியப்பால்

தேறி அவளும் அப்பா - சுட்ட

தீங்கனி தா என்றாள்.


7. மெத்தப் பழுத்துலைந்து - கறுத்து

வெடித்த கனியாக

பத்துப் பதினைந்து - நன்றாய்ப்

பறித்து மண்ணிலிட்டான்.


8. ஒட்டிய மண்ணீங்க - கனியெடுத்

தூதி நிற்கையிலே

சுட்ட கனியிதெனச் - சிறுவன்

சொல்லி மறைந்திட்டான்.


9. மாடு மேய்ப்பவனும் - என்னை

மடக்கி விட்டான் என்று

நாடு புகழும் ஒளவை - அன்று

நாணித் தலைகுனிந்தாள்.


10. கந்தன் முருகனே - ஒளவையின்

கருவம் போக்குதற்கிவ்

விந்தை செய்தானென்று - புலவர்

விளம்புகின் றாரம்மா.


---- கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை




---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


('கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு' என்ற ஒளவையின் போதனையைப் புலவரின் கற்பனையில் காண்கிறோம்)

அருஞ்சொல் விளக்கம்

வேனில் - வெப்ப காலம் நாணம் - வெட்கம்
ஆநிரை - ஆட்டு மந்தை கருவம் - தற்பெருமை
இட்டம் - விருப்பம் விந்தை - புதுமை
இயம்பு - சொல் விளம்பு - கூறு
தீங்கனி - இனிய பழம் மடக்கு - வெல்லுதல்