பாடம் 13:தோழிக்குக் கடிதம்

அன்புத் தோழி கனிமொழிக்கு,

வணக்கம்.

நான் நலமாக இருக்கிறேன். நீயும் உனது குடும்பத்தாரும் நலமா? உனது கடிதம் கிடைத்தது. நீ அனுப்பி வைத்திருந்த நிழற்படங்களும் கிடைத்தன. யாழ்ப்பாணத்து நல்லூர்த் தேர்த் திருவிழா பற்றி நிறைய எழுதியிருந்தாய். மிக்க மகிழ்ச்சி. எனக்கும் அங்கு வர ஆசையாக உள்ளது. அடுத்த வருடம் அப்பா என்னை அங்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

இங்குள்ள முக்கிய இடங்கள் பற்றி எழுதும்படி கேட்டிருந்தாய். இம்முறை இலண்டனில் உள்ள "ஹீத்ரோ" விமான நிலையம் பற்றி எழுதுகிறேன். நீ இங்கு வந்தால் முதன் முதலாகப் பார்க்கப் போகும் இடம் அதுதானே!

உலகிலுள்ள மிகப் பெரிய விமான நிலையங்களில் மூன்றாவது இடத்தைப் பெறுவது "ஹீத்ரோ" விமான நிலையமே. ஆனாலும் அதிக அளவான பயணிகள் வந்து போவதில் முதலாவது இடத்தினை இது பெறுகின்றது. ஒரு வருடத்தில் சராசரியாக 67 மில்லியன் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

"ஹீத்ரோ" விமான நிலையம் 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டிலிருந்துதான் பயணிகள் விமான சேவையை இது ஆரம்பித்தது. இன்று பல வசதிகளுடன் இது காணப்படுகின்றது. இங்கு நான்கு பயணிகள் தரிப்பு நிலையங்கள் (Terminals) உள்ளன. இவற்றை விடவும் பல பொருட்களை ஏற்றி இறக்கும் தரிப்பு நிலையங்களும் (Cargo Terminals)) உள்ளன. நீ நேரில் பார்த்தால் அதிசயப்படுவாய். விமான நிலையத்துடன் இணைந்ததாக தொடருந்து, பேருந்து, சிற்றுந்து நிலையங்கள் என்பன அமைந்து போக்குவரத்துகளுக்கு வசதியாக உள்ளன. எல்லாப் பயணிகள் தரிப்பு நிலையங்களிலும் சகல மதங்களுக்குமுரிய மதகுருக்கள் உள்ளனர்.

பொதுவான வழிபாட்டு மண்டபங்களும் உள்ளன. இது வேறு விமான நிலையங்களில் இல்லாத சிறப்பு அம்சங்களாகும். இவை பற்றி நான் சில நிழற்படங்களை உனக்கு அனுப்பி வைத்துள்ளேன். ஒரு நாள் இந்த விமான நிலையத்தில் உன்னைச் சந்திப்பேன் என நினைக்கின்றேன்.

நன்றி.

இப்படிக்கு

உன் அன்புத் தோழி

வ. பிரியவதனி