பாடம் 3 : புகழ்படைத்தோர்

உலகத்தில் எல்லோரும் ஒரே விதமாகப் பிறப்பதும் இல்லை, ஒரே விதமாக வாழ்வதும் இல்லை. பிறக்கும் போது பல வசதிகளுடன் பிறக்கும் சிலர் வாழும் போது வசதிகள் இன்றி வாழ்வதையும், எது வித வசதிகளும் இன்றிப் பிறந்த சிலர் வாழும்போது பல வசதிகளுடன் வாழ்வதையும் நாம் அறியலாம். அதே போல எங்கோ ஒரு மூலையில் பிறந்த, யாரும் அறியாத ஒரு அனாதை பிற்காலத்தில் உலகம் போற்றும் மேதையாக விளங்கும் வரலாறுகளையும் நாம் படிக்கின்றோம்.

பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போது சாதாரண குழந்தைகளாகவே பிறக்கின்றனர். அவர்களின் முயற்சியே அவர்களைப் புகழ்படைத்தோர் ஆக்குகின்றது. ஒவ்வொருவரும் தமது விருப்பமான தொழில்களில் முயலவேண்டும். விருப்பமும் ஆற்றலும் முயற்சியுமிருந்தால், அவர்கள் செய்யும் காரியங்களில் மிகப் புகழ் அடைவர். அதனால் அவர்கள் புகழேணியின் உச்சத்திற்கே சென்றுவிடுவர். இதனாலே கலைஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர், பாடகர், தொண்டர், வீரர் போன்றவர்கள் தங்கள் தொழிலில் மிக உயருகின்றார்கள். ஆபிரகாம் லிங்கன், தோமஸ் அல்வா எடிசன், சார்லிசப்ளின் போன்று பல்வேறு துறைகளில் புகழ்படைத்தோரை உலகம் மெச்சுகின்றது.

தமிழ் வளர்த்ததில் புகழ் படைத்தவர்களாக ஒளவையார், திருவள்ளுவர், இளங்கோ, ஆறுமுகநாவலர், கால்ட்வெல், வீரமாமுனிவர், விபுலானந்த அடிகள், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், உமறுப் புலவர் போன்றோர் விளங்குகின்றார்கள். “சினிமா” உலகிலே புகழப்படும் தோமஸ் அல்வா எடிசன் சார்லிசப்ளின் கவிஞர்களாகக் கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், வைரமுத்து போன்றோர் பெருமதிப்புள்ளவர்கள். ஈழத்திலே கவிதை எழுதுவதில் புகழ் படைத்தோராக விபுலானந்த அடிகள், சோமசுந்தரப் புலவர், குமாரசுவாமிப் புலவர், காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை போன்ற பலர் தமது படைப்புக்களை வெளியிட்டுப் புகழ் பெற்றார்கள்.

இன்று வளர்ச்சி பெற்ற ஊடகங்கள் மக்களையும் தேசங்களையும் இணைக்கும் பெரும் சக்தியாக விளங்குகின்றது. யாவரும் செய்திகளை இலகுவாகவும் விரைவாகவும் அறிய முடிவதால் ஒவ்வொரு துறைகளிலும் சாதனைகள் புரிவோர் விரைவில் இனம் காணப்படுகின்றார்கள். அவர்களின் புகழ் ஊடகங்கள் மூலம் உலகம் எங்கும் பரவுகின்றது.

பல் வேறு அறிவுத் துறைகளிலும், பல விதமான விளையாட்டுத் துறைகளிலும் முன் நிற்பவர்களைத் தெரிவு செய்வதற்காக உலக நாடுகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. உதாரணமாக நோபல் கழகம் அறிவுத் துறைகளிலும், ஒலிம்பிக் கழகம் விளையாட்டுத் துறைகளிலும் அனைத்துலக ரீதியாகத் தேர்வுகளை நடாத்துவதனை நாம் அறிவோம். வெற்றி பெறுவோருக்காகப் பதக்கங்களும், பரிசுக் கிண்ணங்களும், பொற்கிழிகளும், பாராட்டுக்களும் வழங்கப்படுகின்றன. உலகப் புகழ் பெறுவோர்களின் விடா முயற்சியும் கடின உழைப்புமே அவர்களின் வெற்றிக்குக் காரணம் ஆகின்றன.

“எறும்பு ஊரக் கற்குழியும்” என்ற முது மொழியும் “ராபர்ட் புரூஸ்” (Robert Bruce) என்ற மன்னனின் வரலாறும் இதற்கு நல்ல சான்றாக அமைவதனை நாம் அறியலாம். பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்கொத்லாந்து தேசம் 'றொபேட் புரூஸ்" என்ற மன்னனால் ஆளப்பட்டு வந்தது. அப்போது இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்து தனது நாடு சுதந்திரம் பெற வேண்டும் என றொபேர்ட் புரூஸ் விரும்பினார். இங்கிலாந்துக்கு எதிராக விடுதலைப் போரை ஆரம்பித்தார். வெற்றி பெற முடியவில்லை. ஆறு தடவைகள் திரும்பத் திரும்பப் போர் தொடுத்தும் இங்கிலாந்துப் படைகளால் தோற்கடிக்கப்பட்டார். மனமுடைந்து ஒரு குகையில் தங்கியிருந்தபோது, அவர் முன் ஒரு சிலந்தி வலை பின்ன முயன்று கொண்டிருந்தது. அது ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்குத் தாவும் போது ஆறு தடவைகள் தவறி விழுந்தது. அது மீண்டும் சலிப்பின்றிப் பாய்ந்து, ஏழாவது தடவை தனது வலையைச் சரியாகப்பின்னியது.

இந்த நிகழ்வு றோபேட் புரூசிற்குப் புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளித்தது. மீண்டும் தனது படையினரைத் திரட்டிப் போரில் வெற்றி பெற்றார். ஸ்கொத்லாந்து தன்னாட்சி பெற்ற நாடாக விளங்கப் போராடிய இவர் ஸ்கொத்லாந்தின் தேசிய வீரர்களில் ஒருவராகப் போற்றப்படுகின்றார்.

உலகிற்கு நன்மை செய்து உயர்ந்தவர்கள் போற்றப்படுகிறார்கள், கெடுதல் செய்தவர்கள் தூற்றப்படுகிறார்கள். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்தவர்களும், புதிய சாதனைகளைப் படைத்தவர்களும், மக்கள் மனதில் இடம்பெறுவதனால் புகழ்பெறுகின்றனர். நன்மை செய்து புகழ்படைத்தோரின் வாழ்க்கை வரலாற்றினைக் கற்பதன் மூலம் அவர்களின் வழியில் நாமும் எமது வாழ்வினைச் சீரமைக்க முயல்வோம். மனவைராக்கியத்துடன் முயன்றால் நாமும் புகழ் பெற்று வாழலாம