பாடம் 16:ஆறுவது சினம்

ஆத்திசூடியில் 'ஆறுவது சினம்" என்று கூறும்போது கோபத்தை ஆற்ற வேண்டும் என்பது அதன் பொருள். நாங்கள் கொதிக்க வைத்த தேநீரை ஆற்றுவோம். கொதிநீர் ஆறாது விட்டால் குடிக்க முடியாது. அது நாவையும் சொண்டுகளையும் சுட்டுவிடும். கோபமும் கொதிநீர் போன்றதாகும். இது எம்மையும் சுட்டு, எமக்கு அருகில் நிற்பவரையும் சுட்டுவிடும். இதைக் கொழுக்கட்டைக் கண்ணணின் கதை நன்கு விளக்கும்.

கொழுக்கட்டைக் கண்ணணின் மனைவி தங்கம். அவன் தங்கத்தின் தாய் பொன்னியின் வீட்டுக்குச் சென்றான். மருமகனைக் கண்ட மாமி பொன்னி, இனிமையான கொழுக்கட்டை அவித்துக் கொடுத்தாள். “இது என்ன?” என்று மாமியாரிடம் கேட்டான். அவள் “இது கொழுக்கட்டை” என்றாள். அதற்கு முன் கொழுக்கட்டை உண்டு அறியாத கண்ணன், தன் வீடு சென்றதும் தன் மனைவியிடம் கூறிக் கொழுக்கட்டை அவிப்பித்தல் வேண்டும் என எண்ணினான். கண்ணன் தனது வீட்டுக்கு வரும்போது “கொழுக்கட்டை. கொழுக்கட்டை” என்று மனத்துக்குள் திரும்பத் திரும்பக் கூறி வந்தான்.

தனது வீட்டுக்குச் செல்லும் வழியில், கண்ணன் ஓர் ஆற்றைக் கடக்க நேரிட்டது. அப்போது அவன் கொழுக்கட்டை என்ற சொல்லை மறந்து, “ஆற்றுக்கட்டை, ஆற்றுக்கட்டை” என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு நடந்தான். வீடு வந்து சேர்ந்ததும் மனைவியைப் பார்த்து “தங்கம்!, தங்கம்! எனக்கு ஆற்றுக்கட்டை செய்து தா” என்றான். அவள் தனக்கு ஆற்றுக்கட்டை செய்யத் தெரியாது என்றதும் கோபம் கொண்டான். அங்கிருந்த தடியால் அவளை ஓங்கி அடித்தான். அடித்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டது. தங்கம் “ஐயோ, எனது கை கொழுக்கட்டை போல் வீங்கிவிட்டதே” என்று கூறி அழுதாள். உடனே கண்ணன், “எனக்கு அதுதான் வேண்டும் அதுதான் வேண்டும், என்னை மன்னித்துவிடு. தயவு செய்து எனக்கு கொழுக்கட்டை அவித்துத் தா" என்றான்.

மனிதர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகளில் கோபம் கொள்வதும் ஒன்று. அவ்வாறு ஒருவருக்குக் கோபம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இயலாமை, பொறாமை போன்ற மன நிலைக்கு ஒருவர் ஆட்படும்போது அது மனத்தில் சீற்றமாக மாறுகின்றது. அவ்வாறு ஏற்படும் கோபத்தின் வெளிப்பாடு பல விதமாக இருக்கலாம். அதனால் கோபம் கொண்டவர் மாத்திரம் அன்றி அவரைச் சார்ந்தவர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றார்கள். நாம் எவ்வளவு நல்ல குணங்களைக் கொண்டு இருந்தாலும் அவற்றினைச் சினம் என்ற ஒரு குணம் இல்லாது ஒழித்து விடும். திருக்குறளில் கூறப்பட்ட பின் வரும் குறட்பா, கோபத்தினைக் கட்டுப் படுத்துதல் அவசியம் என்ற கருத்தினை வலியுறுத்துகின்றது.

‘தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.’

மக்கள் ஒன்று சேர்ந்து உறவாடும் போது சில சமயங்களில் கோபம் கொள்வது மனித இயல்புகளில் ஒன்றுதான். இருப்பினும் அவ்வாறு கடும் சினம் கொண்டவர்களில் உத்தம குணம் கொண்ட சிலர், அடுத்த கணமே தமது கோபத்தினை மறந்து சகஜ நிலைக்குத் திரும்பும் பண்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். வேறும் சிலர் சிறிது காலம் சென்றதும் தமது கோபத்தை மறந்துவிடுவர். சிலர் தாம் கொண்ட கோபத்தை மறவாது வாழும் காலம் முழுவதும் தம்முள் பிளவுபட்டு வாழ்வர். இதனை ஒளவையார் பின்வரும் பாடலில் மிகவும் அழகான உவமைகளுடன் கூறுகின்றார்.

‘கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ் சினத்துப்

பொற்பிளவோ டொப்பாடும் போல்வரே - விற்பிடித்து

நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீரொழுகு சான்றோர் சினம்’

(அரும்பத விளக்கம்:- ஒப்பர்-சமம் ஆவார்கள், வடு-பிளவு, சீர் ஒழுகு - நல்வழி நடக்கும், சான்றோர் - சிறப்புடையவர்கள்)