பாடம் 17:பார்த்து இரசித்த விளையாட்டு விழா

எங்கள் தமிழ்ப் பாடசாலையில் ஆண்டுதோறும் பல கொண்டாட்டங்கள் நடைபெறும். அவற்றிலே சிறப்புடையது வருடாந்த விளையாட்டுப் போட்டியாகும். அது மாணவர்கள் யாவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சியாகும். இவ்விழா இவ்விழா ஒவ்வோர்ஆண்டும்ஆடிமாதம் கொண்டாடப்படும். இந்த ஆண்டும் ஆடி மாதம் எமது பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நிகழ்ந்தது. பெரும் ஆரவாரத்துடன் அன்று மதியம் பன்னிரண்டு மணியளவில் அவ்விழா தொடங்கியது.

எமது பாடசாலை விளையாட்டு மைதானம் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதனைச் சூழவரப் பல வண்ணக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அவை பல நிறப் பறவைகள் பறப்பதுபோல் தோற்றமளித்தன. மைதானத்தின் நடுவே பச்சையும் மஞ்சளும் சேர்ந்த பாடசாலையின் கொடி வானளாவப் பறந்தது. அதன் அருகே பாடசாலை இல்லங்களின் கொடிகள் காணப்பட்டன. அவை ஒவ்வொரு இல்லத்துக்குரியவை. பச்சை, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களைக் கொண்டவை. அந்தக் கொடிகள் எல்லாம் மக்களை ‘வாருங்கள், வந்து பாருங்கள்’ எனக் கைகாட்டி அழைப்பது போலக் காற்றில் அசைந்தன.

மைதானத்தின் தென் திசையிலே இல்லங்களுக்குரிய மூன்று பந்தல்கள் காட்சியளித்தன. அவற்றுள் ஒன்று நாவலர் இல்லம். அதற்குரிய நிறம் பச்சை. அவ்வில்லத்தைப் பச்சை இலைகள் கொண்டு கோபுரம் போலக் கட்டி அலங்கரித்திருந்தார்கள். மற்றையது விபுலானந்தர் இல்லம் அதற்குரிய நிறம் மஞ்சள் ஆதலால் மஞ்சள் நிறத்துணிகளால் அழகிய வீடு போல அலங்கரித்திருந்தார்கள். மூன்றாவது இல்லம் நீல நிறமுடையது அது தனிநாயகம் அடிகள் இல்லமாகும். அது ந Pல நிறப்பட்டுத் துணிகளாலும் பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டுக் காணப்பட்டது.

சரியாகப் பன்னிரண்டரை மணிக்குப் பிரதம விருந்தினரும் அவரது பாரியாரும் மைதானம் வந்து சேர்ந்தனர். அவர்களை அதிபர் கைகுலுக்கி வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். முதலில் ஓட்டப் பந்தயங்கள் நிகழ்ந்தன. அதனை அடுத்து குண்டெறிதல், பரிதி வட்டம் வீசுதல் நடைபெற்றன. அப்போது இன்னொரு இடத்தில் உயரம் பாய்தல், நீளம் பாய்தல் போட்டிகள் நிகழ்ந்தன.

மூன்று மணியளவில் இடைவேளை அறிவிக்கப்பட்டது. நாம் எமது இல்லங்களை நோக்கிச் சென்றோம். அங்கு சிற்றுண்டிகளும் குளிர்பானமும் யாவருக்கும் வினியோகிக்கப்பட்டன. தொடர்ந்து பல அஞ்சலோட்டப் போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகள் ஒவ்வொன்றும் ஆரம்பித்ததும், மாணவர்கள் போட்டியிடும் வ Pரர்களை உற்சாகப்படுத்தும் முகமாகக் கைகளைத் தட்டியும், குரல் எழுப்பியும் பலத்த ஆரவாரம் செய்தார்கள். இறுதியில் இல்லங்களுக்கிடையே நடைபெற்ற கயிறிழுத்தல் போட்டியும், விநோத உடைப் போட்டியும் மக்கள் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. இப்போட்டியில் மாணவர்கள் வேடங்கள் போட்டு அபிநயங்கள் செய்தமை யாவரையும் மகிழ்வூட்டியது. மாலை ஆறு மணியளவில் போட்டிகள் முடிவடைந்தன. முதலில் இடம்பெற்ற அதிபர் உரையினை அடுத்துப் பிரதம விருந்தினர் உரையாற்றினார்.

மாணவர்கள் தங்களுடைய அறிவை விருத்திசெய்ய வகுப்பறைக்கு வெளியிலான பலகற்றல் செயன்முறைகளில் ஈடுபடுவதனை வரவேற்றார். இந்தக் கற்றல் செயன்முறைகளை மேற்கொள்வதற்கு, விளையாட்டு நிகழ்ச்சிகள் துணை புரிவதோடு மாணவர்களுக்குத் தேவையான ஆளுமைத் திறன்களை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் கூறினார். பள்ளிப் பருவத்தில் வளர்த்தெடுக்க வேண்டிய ஆளுமைப் பண்புகளை உருவாக்கி, விருத்தி செய்வதிலும் விளையாட்டு நிகழ்ச்சிகள் துணைபுரிகின்றன. விளையாட்டு நிகழ்ச்சியில் பல சட்டதிட்டங்கள், ஒழுக்கக் கோவைகள் காணப்படுகின்றன. இவற்றைக் கடைப்பிடித்து விளையாடுகின்ற போது மாணவர்களிடம் சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, சட்டங்களை மதித்து அதற்குக் கட்டுப்படுகின்ற மனப்பாங்கு, கூட்டு முயற்சி போன்ற பல பண்புகள் உருவாகின்றன.

விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் மாணவர்கள் தலைமைக்குக் கட்டுப்படுவதற்கும், தலைமைத்துவத்தை ஏற்பதற்குமான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு உதாரணமாகக் குழுக்களாகக் கலந்து கொள்ளும் கிரிக்கெட், உதைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களைக் குறிப்பிட்டார். தலைவரின் கட்டளைகளை ஏனைய அங்கத்தினர் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட அணியின் வெற்றி நோக்கிய செயற்பாடுகளை ச Pராக முன்னெடுக்க முடியும். குழுவாக இணைந்து செயற்படும் பண்பும், திறனும் வளர்கின்றன. வெற்றியும்

தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி என்பதை விளையாட்டு வ Pரன் கற்றுக் கொள்கிறான். இதன் மூலம் நிஜவாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு முகம்கொடுத்து வாழப் பழகுகின்றான்.

மாணவர்கள் தங்களுடைய அறிவை விருத்திசெய்வதோடு உடல், உளரீதியாக ஆரோக்கியம் மிக்கவர்களாகத் திகழ்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை விளையாடுவதற்காக ஒதுக்குவதன் மூலம் கற்றலுக்கான ஆர்வத்தையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும் எனவும் யாவரையும் ஈர்க்கும்படி அவர் உரை ஆற்றினார்.

அடுத்ததாக யாவரும் எதிர்பார்த்தபடியே வெற்றி வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பிரதம விருந்தினரின் பாரியார் பரிசில்களை வழங்கினார். பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில், வெற்றிபெற்ற வீரர்கள் பெருமையுடன், வணக்கம் கூறித் தமது பரிசில்களைப் பெற்றனர். அன்றைய போட்டியிலே நாவலர் இல்லமே முதலிடம் பெற்றது. அதற்கு மிகப் பெரிய வெற்றிக் கிண்ணம் பரிசாக வழங்கப்பட்டது. பாடசாலை அதிபர் விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்ட யாவருக்கும் பாராட்டும் நன்றியும் கூறினார். மாணவர்களின் ஆரவாரம் விண்ணை முட்டியது. மாலை ஏழு மணியளவில் பாடசாலைக் கீதத்துடன் விளையாட்டுப் போட்டி நிறைவுற்றது.