தொன்மையான காலத்திலேயே, எழுத்தறிவு இல்லாத பாமர மக்கள் மத்தியில் வாய் மொழிப்பாடல்கள் பாடப்பட்டு வந்துள்ளன என அறிய முடிகின்றது. அப் பாடல்கள் எளிமையான சொற்களைக் கொண்ட சாமான்ய மக்களின் ஆத்ம ராகங்களாக அமைந்து இருந்தன. அத்தகைய பாடல்கள் மக்களால் விரும்பிக் கேட்கப் பெற்று, தலைமுறை தலைமுறையாக இன்றும் பாடப்பட்டு வருகின்றன. இத்தகைய வாய் மொழிப் பாடல்களின் தோற்றம் பற்றி அறுதியாகக் கூறுதல் இயலாது. சாதாரண மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் வாய்மொழிப் பாடல்களை நாட்டார் பாடல்கள் ((Folk Songs) கிராமியப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள் என்று பலவாறு அழைக்கின்றனர். பேச்சு வழக்குச் சொற்களைக் கொண்டு இவ் வகையான பாடல்கள் அமைந்துள்ளமையால் இதனை மக்கள் இலக்கியம் என்றும் கூறுகின்றார்கள்.
கிராமிய மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த இன்ப துன்பங்களின் வெளிப்பாடுகளான இப் பாடல்கள் பலவகையினவாகக் காணப்படுகின்றன. ஆய்வாளர்கள் நாட்டுப் பாடல்களை மக்களின் வாழ்க்கை வட்டத்தின் அடிப்படையில் பகுத்து ஆய்வு செய்கின்றனர். அப் பாடல்கள் மருத்துவிச்சிப் பாடல், தாலாட்டுப் பாடல், விளையாட்டுப் பாடல், காதல் பாடல், திருமண வாழ்த்துப் பாடல், தொழில் பாடல், நையாண்டிப் பாடல், ஒப்பாரிப் பாடல், கானா பாடல ;எனறு; பல வகைபப்டுகினற்ன. பாமர மகக்ளின ;உளள்தது; உணாச்ச்pகளின் வடிகால்களாக இப் பாடல்கள் அமைந்து காணப்படுகின்றன. அவர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களையும், ஆழ் மனத்து எண்ணங்களையும் தனிப்பட்ட இன்ப துன்பங்களையும் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக நாட்டுப் பாடல்கள் விளங்குகின்றன.
கிராமப் புறங்களில் குழந்தை பிறக்கும் போது, மருத்துவிச்சி வீட்டினுள் இருந்தவாறே பொருத்தமான பாடலைப் பாடுவாள். இதனையே “மருத்துவிச்சிப் பாடல்” என அழைக்கின்றனர். இவை இடத்துக்கிடம் வேறுபாடுகளுடன் பாடப்படுகின்றன.
“அரிசிப் பொரியோடு; வந்தீரோ தம்பி அரிசி மலைநாடும் கண்டீரோ தம்பி உள்ளிப் பொதியோடும் வந்தீரோ தம்பி உள்ளி மலைநாடும் கண்டீரோ தம்பி”
இவ்வாறு பாடப்படும் மருத்துவிச்சிப் பாடல் பாடப்படும்போது ஆண்குழந்தைக்கு வேறாகவும் பெண்குழந்தைக்கு வேறாகவும் அமையும். மருத்துவிச்சி பாடும் பாடலைக் கொண்டே வெளியில் இருப்பவர்கள் என்ன குழந்தை பிறந்தது 4 என்பதை அறிந்து கொள்வார்கள்.
குழந்தைகளை ஆறுதல் படுத்துவதற்கும் தூங்க வைப்பதற்கும் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களில் பல விதமான செய்திகளும் கலந்து இருப்பதனைக் காண முடியும்.
ஆராரோ ஆரிவரோ, ஆரிவரோ ஆராரோ! ஆரடிச்சு நீ அழுதாய், அடிச்சவரைச் சொல்லி அழு மாமன் அடிச்சானோ, மல்லிகைப் பூச்செண்டாலே! மாமி அடிச்சாளோ, மருக்கொளுந்துக் கையாலே! ஆச்சி அடித்தாவோ, அமுதூட்டும் சங்காலே! அண்ணன் அடித்தானோ, ஆவாரம் கொம்பாலே! பச்சை இலுப்பை வெட்டி, பால் வடியத் தொட்டில் கட்டி, பவளக்கால் தொட்டிலிலே, பாலகனே நீ உறங்காய்!
மேலே காணப்படுவன போன்ற தாலாட்டுப் பாடல்களின் சொற்களும், அடிகளும் பிரதேசத்திற்குப் பிரதேசம் பாட பேதங்களுடன் காணப்படும். நாட்டுப் புற மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பிணைந்து குழந்தைப் பருவத்தினர் முதல் பெரியவர்;கள் வரை பாடும் பாடல்கள் பல உண்டு. விளையாடும் போதும் பொழுதைப் போக்குவதற்காகவும் பாடும் பாடல்கள் பல நாட்டுப் புற மக்கள் மத்தியில் தற்போதும் வழங்கி வருகின்றன.
சாலையிலே சோலையிலே ஆலங்காட்டுச் சந்தையிலே கிட்டிப் புள்ளும் பம்பரமும் கிறுக்கி அடிக்கப் பாலாறு பாலாறு பாலாறு பாலாறு.
மேலே காணும் பாடலைக் கிட்டியடித்து விளையாடும் போது பாடுவது போலவே, கபடி விளையாடும் போது பின்வரும் பாடல் பாடப்படுவதனை அறிகின்றோம்.
கவடியடிக்கக் கவடியடிக்க, கைகால் முறியக் கைகால் முறியக், காலுக்கு மருந்து தேடிக்கட்டு, தேடிக்கட்டு.
பல திரிபுகள் கொண்ட வட்டார வழக்குச் சொற்களுடன் பாடப்படுவது இவ் வகையான பாடல்களின் ஒரு தன்மையாகும்.
காடு கழனிகளிலும் தோட்டம் துரவுகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது களைப்புத் தோன்றாது இருக்கப் பாடப்படுவன போன்று பல நாட்டுப் பாடல்கள் அமைந்துள்ளன. மேலும் இத்தகைய பல விதமான பாடல்கள் விளையாடும் போதும், வேடிக்கையாகப் பொழுது போக்குவதற்கும் பாடப்பட்டு வருகின்றன. கடல் தொழிலாளரும், பார வண்டி ஓட்டிகளும், தோட்டத்தில் ஏற்றம்
இறைப்பவரும், வயலில் நாற்று நடுவோரும் பாடும் பாடல்கள் கிராமப் புறங்களில் இன்றும் வழக்கில் இருக்கின்றன. வாழ்வியல் அம்சங்களைக் கொண்ட இப் பாடல்கள் ஓசை நயம் கொண்டவையாக, சில சமயம் பாடுபவர்களாலேயே புனையப்பட்டும் பாடப்படுகின்றன. அதிகாலையில் எழுந்து ஏற்றம் இறைக்கும் நாட்டுப் பாடகன் ஒருவனின் பாடலைப் பாருங்கள்.
மூங்கில் இலைமேலே தேங்கும் பனி நீரே! கோவை இலைமேலே கொள்ளும் பனி நீரே! பாவை இலை மேலே படரும் பனி நீரே! வாழை இலை மேலே படரும் பனி நீரே!
மண்ணை நம்பி வாழும் மக்களைப் போலவே கடலை நம்பி வாழும் மீனவர்களும், படகு ஓட்டிகளும் தமது வட்டார வழக்கில் அமைந்த சொற்களைக் கொண்ட பாடல்களைப் புனைந்து பாடுவர். மீனவர்களின் வாழ்வை சுருக்கமாக விளக்கும் வகையில் பின்வரும் பாடல் அமைகின்றது.
விடிவெள்ளி நம் விளக்கு – ஐலசா விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசா அடிக்கும் அலை நம் தோழன் - ஐலசா பிடிக்கும் மீன்கள் நம் பிழைப்பு – ஐலசா கட்டுமரம் நமது வீடு – ஐலசா தொழும் தலைவன் பெருவானம் - ஐலசா
பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மழையிலும், பனியிலும், வெயிலிலும் வருந்தி உழைப்பார்கள். அவர்கள் மலை நாடுகளில் உள்ள கோப்பித் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், இறப்பர் தோட்டங்களிலும் வேலை செய்யும் போது தமது சுக துக்கங்களைப் பாடுவதன் மூலம் வெளிப்படுத்துவர்.
கோப்பி பழுத்துரிச்சு கோண்டு போக நாளாச்சு சீமைத் தொரைகள் எல்லாம் சிரிக்கிறாக சன்னலிலே! பழமும் எடுக்கவில்லே பழைய சோறும் திங்கவில்லே வீட்டுக்குப் போகவில்லே வேகுதையா எம்மனசு.
பத்து மணி நேரத்திலே பழம் எடுக்கும் வேளையிலே பரிகாசம் பேசியல்ல பவுன் கொடுத்தார் கையிலயே கண்டிருந்த கருத்தக்குட்டி கணக்கன் கிட்ட சொல்லிட்டாளே!
சோகத்தின் சாயல் இழையோடும் அதே சமயம் குறும்;பாகவும், வேடிக்கையாகவும் மேற்காணும் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இறப்பு நேரும்போது பாடப்படும் தன்னுணற்சிப் பாடல்கள் ஒப்பாரிப் பாடல்கள் எனப்படும். அவை மிகவும் உணர்ச்சி பூர்வமானதாக அமையும். கணவனை இழந்த பெண் பாடும் ஒப்பாரிப் பாடல் ஒன்றைக் கீழே காணலாம்.
“முத்துப் பதித்தமுகம் - என்ரைராசா நீ முழுநிலவாய் நின்றமுகம் போகக் கால் ஏவினதோ – என்ரைராசா - இந்தப் போல்லாதாள் தன்னை விட்டு நாக்குப் படைச்சவையள் - இங்கே நாகரிகம் பேசுவினம் மூக்குப் படைச்சவையள் - இனி முழுவியளம் பேசுவினம்….”
தனிமனித அவல உணர்வுகளுடன் சமூக பண்பாட்டுக் கோலங்களும் மேல் காணும் ஒப்பாரிப் பாடலில் புலப்படுகின்றது. அவற்றுடன் தோற்றம், திறமை, பொருள்வளம் ஆகியவற்றின் ஒப்புமைக் கோலங்களும் இத்தகைய பாடல்களில் வெளிப்படுத்தப்படுவதனைக் காணலாம்.
உழவுத்தொழிலின் உயிரான மழை பொய்த்த காலம் பற்றிய விவசாயிகளின் ஏக்கத்தைப் பின்வரும் பாடல்கள் வெளிக்காட்டுகின்றன.
ஆத்தில ஊத்துத் தோண்டி அழகுச் சம்பா நாத்துப்பாவி ஆத்துத் தண்ணி வத்த வத்த அழகுச் சம்பா வாடுதல்லோ! மழையோ வருகுதிண்ணு வாங்கி வச்சேன் கம்பு விதை| வந்த மழை போயிருச்சே வயக்காட்டுக் கன்னியம்மா!
தமது தொழிலை ஆரம்பிக்கும் போது அது நலமே முடிவுற இறைவனை வேண்டிப் பாடும் பாடல்கள் பல உண்டு. சிறுதெய்வ வழிபாடு மிகுந்து காணப்படும் சமூகத்தவர் மத்தியில் நோய், பிணி, பஞ்சம் அண்டாது காக்குமாறு குல தெய்வங்களை வேண்டி வணங்கிப் பாடும் முறைமை காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தமது வாழ்வில் நலன் பெருகவேண்டும் எனக் கடவுளை வேண்டிப் பாடும் ஒரு பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.
பட்டி பெருக வேணும் தம்பிரானே பால்பானை பொங்கவேணும் தம்பிரானே மேழி பெருக வேணும் தம்பிரானே வேளாண்மை விளைய வேணும் தம்பிரானே நாடு தழைக்க வேணும் தம்பிரானே நல்லமழை பெய்ய வேணும் தம்பிரானே ஏரு செழிக்க வேணும் தம்பிரானே எல்லோரும் வாழ வேணும் தம்பிரானே.
இவ்வாறான நாட்டுப் புறப் பாடல்கள் இலக்கண வரம்புகள் எனும் கட்டுப்பாடுகள் கொண்டவையாக இருப்பதில்லை. ஒரே சொற்கள் திரும்பத்திரும்ப வருவது இத்தகைய பாடல்களில் காணப்படும் ஒரு அம்சமாகும். அதே சமயம் இடத்துக்கிடம் வேறுபடுகின்ற பேச்சுவழக்குகள் இடம் பெறுவது நாட்டுப் பாடல்களின் இயல்பாகும்.
பல்வேறு காலப் பகுதியைச் சேர்ந்த கிராமிய மக்களின் வாழ்க்கை முறைகளையும், சொல் வழக்குகளையும் மட்டும் அன்றி அக்காலத்து நாட்டு நடப்புக்களையும் வரலாற்றுச் செய்திகளையும் கூட நாட்டுப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. கர்ண பரம்பரையாகவே பேணப்பட்டு வந்த நாட்டார் பாடல்கள், காலப் போக்கில் பத்திரிகைகள், வானொலி, திரைப்படம் போன்ற ஊடகங்களின் மூலம் சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் சென்றடைகின்றது. தற்காலத்தில் உலகெங்கும் உள்ள பல்கலைக் கழக மொழித்துறைகளில் நாட்டுப் பாடல்கள் ஆய்வுப் பொருளாக அமைந்துள்ளன.