“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்பதற்கு இணங்க இந்த உலக வாழ்வை முழுமையாக வாழ வேண்டுமாயின், நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும். டாக்டரிடம் செல்வதும், மருந்துகள், மாத்திரைகள் சாப்பிடுவதும் மாத்திரம் ஆரோக்கியத்தைப் பேணுவது ஆகாது. உடல் ஆரோக்கியத்திற்கு சத்துள்ள உணவுகளை நாம் உண்ண வேண்டும்.
குளிர் சாதனப் பெட்டிகளில் நீண்டகாலம் வைத்துப் பாதுகாக்கப்பட்ட உணவுகளை வாங்கி உண்ணும் பழக்கத்தையும், துரித உணவுகளை உண்பதையும் இயன்ற அளவில் தவிர்க்க வேண்டும். இவை கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுகளாகும். பச்சை நிற இலைக்கறி வகைகள், காய்கள், கனிகள், பால், மீன் வகைகள், கொழுப்புச் சத்துக் குறைந்த இறைச்சி வகைகள் ஆகியவற்றை எமது உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
எமது முன்னோர்கள் எமது தாயகங்களில் நீண்ட காலம் நலமாக வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு அவர்களது உணவு வகைகளே முக்கிய காரணமாகும். குரக்கன், சாமை, எள்ளு, கேழ்வரகு, பயறு, உழுந்து, கடலை, பலவகையான கிழங்குகள் போன்றவை மிகவும் சத்துள்ள உணவுகளாகும். சத்துடைய உணவை அளவோடு உண்பதுடன் உடற் பயிற்சிகளும் உடலுக்கு அவசியம். விளையாட்டுக்கள் உடலுக்குப் பயிற்சியும், வலுவும் அளிக்கின்றன. தமிழர்களாகிய எம்மிடம் சிலம்பாட்டம், அம்பு எறிதல், குதிரை ஏற்றம், வாள் வித்தை போன்ற பல பாரம்பரிய விளையாட்டுக்கள் உள்ளன. உணவு, உடற் பயிற்சி இவைகளோடு சுத்தமான நீர், காற்று, சுற்றாடல் என்பனவும் மனிதர்களுடைய ஆரோக்கிய வாழ்விற்கு அவசியமாகின்றன.
நோய்கள் அணுகாதவண்ணம் சுகாதாரமான பழக்கங்களை கைக்கொள்ளல் அவசியம். இராமலிங்க வள்ளலார் கூறுவதுபோல கோவிலாகிய உடம்பினுள்ளே உயிராகிய இறைவன் உறைகின்றான். எனவே அதனைப் போற்றிப் பாதுகாப்பது எமது தலையாய கடன் அன்றோ.
“உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே”