பாடம் 21 : வீட்டுவேலை

நான்காம் வகுப்பில் பாடம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தனர். அப்போது இரண்டு எலிகள் வகுப்பின் மேலே உள்ள கூரையில் ஓடித்திரிந்துவிட்டுத் தமது வளையினுள் புகுவதை மயூரன் அவதானித்தான். அவனது கவனம் முழுவதும் அந்த எலிகளின் மேலேயே இருந்தது. ஆசிரியர் கற்பிப்பதைக் கவனிக்காது மேலே என்ன நடக்கின்றது என்பதனை அறியும் ஆவலினால் அண்ணாந்து பார்த்தபடியே இருந்தான்.

தற்செயலாக மயூரன் அமர்ந்திருந்த இடத்திற்குத் தன் பார்வையைத் திருப்பிய ஆசிரியர் சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அதனைக் கண்ட எல்லா மாணவர்களும் மயூரன் பக்கம் திரும்பினார்கள். மயூரன் இவை ஒன்றையும் கவனிக்கவில்லை. சிறிது நேர அமைதிக்குப் பின்னர் “மயூரன், நான் கூறியவை எல்லாம் உன் மனதிற்குள் புகுந்துவிட்டனவா?” என்று கேட்டார் ஆசிரியர். “எல்லாம் புகுந்துவிட்டன ஆனால் வால் மட்டும் புகவில்லை” என்றான் மேலே பார்த்துக்கொண்டிருந்த மயூரன்.

1. சொற்களின் பொருள்களைத் தேடியறிந்து எழுதுக.

கவனம் -________________ வளை -________________
கூரை -________________ ஆவல் -________________
உற்று -________________ அமைதி -________________
புகுதல் -________________ அண்ணாந்து -________________